12.340 சாக்கிய நாயனார் புராணம் ( ) |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.340  
சாக்கிய நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசமயத் தலைவராய் நின்றவருக் கன்பராய் மறுசமயச் சாக்கியர்தம் வடிவினால் வருந்தொண்டர் உறுதிவரச் சிவலிங்கங் கண்டுவந்து கல்லெறிந்து மறுவில்சரண் பெற்றதிறம் அறிந்தபடி வழுத்துவாம்.
| [1] |
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய வேளாளர் குலத்துதித்தார் மிக்கபொருள் தெரிந்துணர்ந்து கேளாகிப் பல்லுயிர்க்கும் அருளுடைய ராய்க்கெழுமி நீளாது பிறந்திறக்கும் நிலைஒழிவேன் எனநிற்பார்.
| [2] |
அந்நாளில் எயிற்காஞ்சி அணிநகரம் சென்றடைந்து நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார் முன்னாகச் சாக்கியர்தாம் மொழியறத்தின் வழிச்சார்ந்து மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழிஉணர்வார்.
| [3] |
அந்நிலைமைச் சாக்கியர்தம் அருங்கலைநூல் ஓதிஅது தன்னிலையும் புறச்சமயச் சார்வுகளும் பொருளல்ல என்னுமது தெளிந்தீச ரருள்கூட ஈறில்சிவ நன்னெறியே பொருளாவ தெனவுணர்வு நாட்டுவார்.
| [4] |
செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொரு ளெனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.
| [5] |
எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளென்றே துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவம் தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்.
| [6] |
காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச் சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்.
| [7] |
நாடோறும் சிவலிங்கங் கண்டுண்ணு மதுநயந்து மாடோர்வெள் ளிடைமன்னும் சிவலிங்கங் கண்டுமனம் நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கல் கண்டதனைப் பதைப்போடும் எடுத்தெறிந்தார்.
| [8] |
அகநிறைந்த பேருவகை அடங்காத ஆதரவால் மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால் இகழ்வனவே செய்தாலும் இளம்புதல்வர்க் கின்பமே நிகழுமது போலதற்கு நீள்சடையார் தாம்மகிழ்வார்.
| [9] |
அன்றுபோய்ப் பிற்றைநாள் அந்நியதிக் கணையுங்கால் கொன்றைமுடி யார்மேற்றாங் கல்லெறிந்த குறிப்பதனை நின்றுணர்வா ரெனக்கப்போ திதுநிகழ்ந்த தவரருளே என்றதுவே தொண்டாக வென்றுமது செயநினைந்தார்.
| [10] |
தொடங்கியநா ளருளியவத் தொழிலொழியா வழிதொடரும் கடன்புரிவா ரதுகண்டு கல்லெறிவார் துவராடைப் படம்புனைவே டந்தவிரார் பசுபதியார் தஞ்செயலே அடங்கவுமென் பதுதெளிந்தா ராதலினால் மாதவர்தாம்.
| [11] |
இந்நியதி பரிவோடு வழுவாம லிவர்செய்ய முன்னுதிருத் தொண்டாகி முடிந்தபடி தான்மொழியில் துன்னியமெய் யன்புடனே யெழுந்தவினை தூயவர்க்கு மன்னுமிகு பூசனையாம் அன்புநெறி வழக்கினால்.
| [12] |
கல்லாலே யெறிந்ததுவு மன்பான படிகாணில் வில்வேடர் செருப்படியும் திருமுடியின் மேவிற்றால் நல்லார்மற் றவர்செய்கை யன்பாலே நயந்ததனை அல்லா தார் கல்லென்பா ரரனார்க்கஃ தலராமால்.
| [13] |
அங்கொருநாள் அருளாலே அயர்ந்துண்ணப் புகுகின்றார் எங்கள்பிரான் றனையெறியா தயர்த்தேன்யா னெனவெழுந்து பொங்கியதோர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு வெங்கரியி னுரிபுனைந்தார் திருமுன்பு மேவினார்.
| [14] |
கொண்டதொரு கல்லெடுத்துக் குறிகூடும் வகையெறிய உண்டிவினை யொழித்தஞ்சி யோடிவரும் வேட்கையொடும் கண்டருளுங் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் தொண்டரெதிர் நெடுவிசும்பில் துணைவியொடுந் தோன்றுவார்.
| [15] |
மழவிடைமே லெழுந்தருளி வந்ததொரு செயலாலே கழலடைந்த திருத்தொண்டர் கண்டுகரங் குவித்திறைஞ்சி விழவருணோக் களித்தருளி மிக்கசிவ லோகத்தில் பழவடிமைப் பாங்கருளிப் பரமரெழுந் தருளினார்.
| [16] |
ஆதியார் தம்மை நாளுங் கல்லெறிந் தணுகப் பெற்ற கோதில்சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை யவர்க்கு நல்கும் சோதியா ரறித லன்றித் துணிவதென் அவர்தாள் சூடித் தீதினை நீக்க லுற்றேன் சிறப்புலி யாரைச் செப்பி.
| [17] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.350  
சிறப்புலி நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன்னிநீர் நாட்டின் நீடும் பொற்பதி புவனத் துள்ளோர் இன்மையால் இரந்து சென்றார்க் கில்லையென் னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
| [1] |
தூமலர்ச் சோலை தோறும் சுடர்நெடு மாடந் தோறும் மாமழை முழக்கந் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும் பூமலி மறுகில் இட்ட புகையகில் தூபந் தாழ ஓமநல் வேள்விச் சாலை ஆகுதித் தூப மோங்கும்.
| [2] |
ஆலை சூழ் பூகவேலி அத்திரு வாக்கூர் தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார் நீலமார் கண்டத் தெண்டோள் நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினிற் சிறந்த நீரார்.
| [3] |
ஆளும்அங் கணருக் கன்பர் அணைந்தபோ தடியில் தாழ்ந்து மூளுமா தரவு பொங்க முன்புநின் றினிய கூறி நாளும்நல் லமுதம் ஊட்டி நயந்தன வெல்லாம் நல்கி நீளும்இன் பத்துள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.
| [4] |
அஞ்செழுத் தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம் நஞ்சணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க் கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள்நிழல் தங்கி னாரே.
| [5] |
அறத்தினின் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் மறைப்பெரு வள்ள லார்வண் சிறப்புலி யார்தாள் வாழ்த்திச் சிறப்புடைத் திருச்செங் காட்டங் குடியினிற் செம்மை வாய்த்த விறற்சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.
| [6] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.360  
சிறுத்தொண்ட நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உருநாட்டும் செயல்காமன் ஒழியவிழி பொழிசெந்தீ வருநாட்டத் திருநுதலார் மகிழ்ந்தருளும் பதிவயலில் கருநாட்டக் கடைசியர்தங் களிகாட்டுங் காவேரித் திருநாட்டு வளங்காட்டுஞ் செங்காட்டங் குடியாகும்.
| [1] |
நிலவியஅத் திருப்பதியில் நெடுஞ்சடையார் நீற்றடைவால் உலகில்வள ருயிர்க்கெல்லாம் உயர்காவல் தொழில்பூண்டு மலர்புகழ்மா மாத்திரர்தங் குலம்பெருக வந்துள்ளார் பலர்புகழுந் திருநாமம் பரஞ்சோதி யாரென்பார்.
| [2] |
ஆயுள்வே தக்கலையும் அலகில்வட நூற்கலையும் தூயபடைக் கலத்தொழிலும் துறைநிரம்பப் பயின்றுள்ளார் பாயுமதக் குஞ்சரமும் பரியுமுகைக் கும்பண்பு மேயதொழில் விஞ்சையினும் மேதினியில் மேலானார்.
| [3] |
உள்ளநிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவென்றே கொள்ளும்உணர் வினின்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய்என்றும் பயின்றுவரும் பண்புடையார்.
| [4] |
ஈசன்அடி யார்க்கென்றும் இயல்பான பணிசெய்தே ஆசில்புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்காகப் பூசல்முனைக் களிறுகைத்துப் போர்வென்று பொருமரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
| [5] |
மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.
| [6] |
கதிர்முடிமன் னனுமிவர்தங் களிற்றுரிமை யாண்மையினை அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்தவமைச் சர்களுரைப்பார் மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி யுடைமையினால் எதிரிவருக் கிவ்வுலகி லில்லையென வெடுத்துரைத்தார்.
| [7] |
தம்பெருமான் திருத்தொண்டர் எனக்கேட்ட தார்வேந்தன் உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன் வெம்புகொடும் போர்முனையில் விட்டிருந்தேன் எனவெருவுற்று எம்பெருமான் இதுபொறுக்க வேண்டுமென இறைஞ்சினான்.
| [8] |
இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற்கடுத்த திறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன ஆங்கவர்க்கு நிறைந்தநிதிக் குவைகளுடன் நீடுவிருத் திகளளித்தே அறம்புரிசெங் கோலரசன் அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
| [9] |
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர் எம்முடைய மனக்கருத்துக் கினிதாக விசைந்துஉமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச் செம்மைநெறித் திருத்தொண்டு செய்யுமென விடைகொடுத்தான்.
| [10] |
மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்தடைந்து பன்னுபுகழ்ப் பரஞ்சோதி யார்தாமும் பனிமதிவாழ் சென்னியரைக் கணபதீச் சரத்திறைஞ்சித் திருத்தொண்டு முன்னை நிலைமை யில்வழுவா முறையன்பிற் செய்கின்றார்.
| [11] |
வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கையெனும் காதன்மனைக் கிழத்தியார் கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனை யறம்புரியும் நீர்மையினில் நிலைநிற்பார்.
| [12] |
நறையிதழித் திருமுடியார் அடியாரை நாள்தோறும் முறைமையினில் திருவமுது முன்னூட்டிப் பின்னுண்ணும் நிறையுடைய பெருவிருப்பால் நியதியா கக்கொள்ளும் துறைவழுவா வகையொழுகுந் தூயதொழில் தலைநின்றார்.
| [13] |
தூயதிரு வமுதுகனி கன்னல்அறு சுவைக்கறிநெய் பாயதயிர் பால்இனிய பண்ணியம்முண் ணீரமுதம் மேயபடி யாலமுது செய்விக்க இசைந்தடியார் மாயிருஞா லம்போற்ற வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
| [14] |
சீதமதி அரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த நாதன்அடி யார்தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் மேதகையார் அவர்முன்பு மிகச்சிறிய ராய்அடைந்தார் ஆதலினால் சிறுத்தொண்டர் எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
| [15] |
கண்ணுதலார் கணபதீச் சரத்தின்கண் கருத்தமர உண்ணிறைஅன் பினிற்பணிசெய் தொழுகுவார் வழுவின்றி எண்ணில்பெருஞ் சீரடியார் இடைவிடா தமுதுசெய நண்ணியபே ருவகையுடன் நயந்துறையும் நாளின்கண்.
| [16] |
நீராருஞ் சடைமுடியார் அருளினால் நிறைதவத்துப் பேராளர் அவர்தமக்குப் பெருகுதிரு மனையறத்தின் வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கைபால் சீராள தேவரெனும் திருமைந்தர் அவதரித்தார்.
| [17] |
அருமையினில் தனிப்புதல்வர் பிறந்தபொழு தலங்கரித்த பெருமையினிற் கிளைகளிப்ப பெறற்கரிய மணிபெற்று வருமகிழ்ச்சி தாதையார் மனத்தடங்கா வகைவளரத் திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங் குடியெடுப்ப.
| [18] |
மங்கலநல் லியம்முழக்கம் மறைமுழக்கம் வானளப்ப அங்கணர்தஞ் சீரடியார்க் களவிறந்த நிதியளித்துத் தங்கள்மர பினில்உரிமைச் சடங்குதச தினத்தினிலும் பொங்குபெரு மகிழ்ச்சியுடன் புரிந்துகாப் பணிபுனைந்தார்.
| [19] |
ஆர்வநிறை பெருஞ்சுற்றம் அகம்மலர வளித்தவர்தாம் பார்பெருகு மகிழ்ச்சியுடன் பருவமுறைப் பாராட்டுச் சீர்பெருகச் செய்யவளர் திருமகனார் சீரடியில் தார்வளர்கிண் கிணியசையத் தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
| [20] |
சுருளுமயிர் நுதற்சுட்டி துணைக்காதின் மணிக்குதம்பை மருவுதிருக் கண்டநாண் மார்பினில்ஐம் படைகையில் பொருவில்வயி ரச்சரிகள் பொன்னரைஞாண் புனைசதங்கை தெருவிலொளி விளங்கவளர் திருவிளையாட் டினிலமர்ந்தார்.
| [21] |
வந்துவளர் மூவாண்டில் மயிர்வினைமங் கலஞ்செய்து தந்தையா ரும்பயந்த தாயாருந் தனிச்சிறுவர் சிந்தைமலர் சொல்தெளிவில் செழுங்கலைகள் பயிலத்தம் பந்தமற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினார்.
| [22] |
அந்நாளில் சண்பைநகர் ஆண்டகையார் எழுந்தருள முன்னாக எதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்தம் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.
| [23] |
சண்பையர்தம் பெருமானும் தாங்கரிய பெருங்காதல் பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவரை மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி எழுந்தருளத் தாமினிது நயப்புற்றார்.
| [24] |
இத்தன்மை நிகழுநாள் இவர்திருத்தொண் டிருங்கயிலை அத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய அவருடைய மெய்த்தன்மை அன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாம் சித்தமகிழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்.
| [25] |
மடல்கொண்ட மலரிதழி நெடுஞ்சடையை வனப்பெய்தக் கடல்மண்டி முகந்தெழுந்த காளமேகச் சுருள்போல் தொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி படர்துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி.
| [26] |
அஞ்சனம்மஞ் சனஞ்செய்த தனையவணி கிளர்பம்பை மஞ்சினிடை யிடையெழுந்த வானமீன் பரப்பென்னப் புஞ்சநிரை வண்டுதேன் சுரும்புபுடை படர்ந்தார்ப்பத் துஞ்சினுனித் தனிப்பரப்புந் தும்பைநறு மலர்தோன்ற.
| [27] |
அருகுதிரு முடிச்செருகும் அந்தியிளம் பிறைதன்னைப் பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச்சாத் தியதென்ன விரிசுடர்ச்செம் பவளவொளி வெயில்விரிக்கும் விளங்குசுடர்த் திருநுதல்மேல் திருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.
| [28] |
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்குமதி மண்டலமும் அவ்வனற்செய் மண்டலமும் உடன்அணைந்த தெனவழகை வவ்வுதிருக் காதின்மணிக் குழைச்சங்கு வளைத்ததனுள் செவ்வரத்த மலர்செறித்த திருத்தோடு புடைசிறக்க.
| [29] |
களங்கொள்விடம் மறைத்தருளக் கடலமுதக் குமிழிநிரைத் துளங்கொளிவெண் திரள்கோவைத் தூயவடம் அணிந்ததென உளங்கொள்பவர் கரைந்துடலும் உயிரும்உரு கப்பெருக விளங்குதிருக் கழுத்தினிடை வெண்பளிங்கின் வடந்திகழ.
| [30] |
செம்பரிதி கடலளித்த செக்கரொளி யினைஅந்திப் பம்புமிருள் செறிபொழுது படர்ந்தணைந்து சூழ்வதெனத் தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத் ததுசாத்தும் அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க.
| [31] |
மிக்கெழும்அன் பர்கள்அன்பு திருமேனி விளைந்ததென அக்குமணி யாற்சன்ன வீரமும்ஆ ரமும்வடமும் கைக்கணிதோள் வளைச்சரியும் அரைக்கடிசூத் திரச்சரியும் தக்கதிருக் காற்சரியுஞ் சாத்தியவொண் சுடர்தயங்க.
| [32] |
பொருவில்திருத் தொண்டர்க்குப் புவிமேல்வந் தருள்புரியும் பெருகருளின் திறங்கண்டு பிரானருளே பேணுவீர் வரும்அன்பின் வழிநிற்பீர் எனமறைபூண் டறைவனபோல் திருவடிமேல் திருச்சிலம்பு திசைமுழுதுஞ் செலவொலிப்ப.
| [33] |
அயன்கபா லந்தரித்த விடத்திருக்கை யாலணைத்த வயங்கொளிமூ விலைச்சூல மணித்திருத்தோள் மிசைப்பொலியத் தயங்குசுடர் வலத்திருக்கைத் தமருகத்தின் ஒலிதழைப்பப் பயன்தவத்தாற் பெறும்புவியும் பாததா மரைசூட.
| [34] |
அருள்பொழியுந் திருமுகத்தில் அணிமுறுவல் நிலவெறிப்ப மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்பப் பொருள்பொழியும் பெருகன்பு தழைத்தோங்கிப் புவியேத்தத் தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிசேர்ந்தார்.
| [35] |
தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து தொண்டானார்க் கெந்நாளும் சோறளிக்குந் திருத்தொண்டர் வண்டார்பூந் தாரார்இம் மனைக்குள்ளா ரோவென்ன.
| [36] |
வந்தணைந்து வினவுவார் மாதவரே யாம்என்று சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார் எந்தமையா ளுடையவரே அகத்துள்எழுந் தருளுமென.
| [37] |
மடவரலை முகநோக்கி மாதரார் தாம்இருந்த இடவகையில் தனிபுகுதோம் என்றருள அதுகேட்டு விடவகல்வார் போலிருந்தார் எனவெருவி விரைந்துமனைக் கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலையெய்தி.
| [38] |
அம்பலவ ரடியாரை யமுதுசெய்விப் பாரிற்றைக் கெம்பெருமான் யாவரையுங் கண்டிலர்தே டிப்போனார் வம்பெனநீ ரெழுந்தருளி வருந்திருவே டங்கண்டால் தம்பெரிய பேறென்றே மிகமகிழ்வர் இனித்தாழார்.
| [39] |
இப்பொழுதே வந்தணைவர் எழுந்தருளி யிரும்என்ன ஒப்பின் மனை யறம்புரப்பீர் உத்தரா பதியுள்ளோம் செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர் தமைக்காணச் சேர்ந்தனம்யாம் எப்பரிசும் அவரொழிய இங்கிரோம் என்றருளி.
| [40] |
கண்ணுதலிற் காட்டாதார் கணபதீச் சரத்தின்கண் வண்ணமலர் ஆத்தியின்கீழ் இருக்கின்றோம் மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர் என்றருளி அண்ணலார் திருவாத்தி யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
| [41] |
நீரார் சடையான் அடியாரை நேடி யெங்குங் காணாது சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டுஞ் செல்வ மனையெய்தி ஆரா அன்பின் மனைவியார்க்கு இயம்பி அழிவெய் திடஅவரும் பார்ஆ தரிக்குந் திருவேடத் தொருவர் வந்த படிபகர்ந்தார்.
| [42] |
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார் உரையா யென்ன அவர்மொழிவார் வடிசேர் சூல கபாலத்தர் வடதே சத்தோம் என்றார்வண் துடிசேர் கரத்துப் பயிரவர்யாம் சொல்ல இங்கும் இராதேபோய்க் கடிசேர் திருவாத் தியினிழற்கீழ் இருந்தார் கணப தீச்சரத்து.
| [43] |
என்று மனைவி யார்இயம்ப எழுந்த விருப்பால் விரைந்தெய்திச் சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் நின்ற தொண்டர் தமைநோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் என்று திருவாய் மலர்ந்தருள இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
| [44] |
பூதி யணிசா தனத்தவர்முன் போற்றப் போதேன் ஆயிடினும் நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர் நானென்று கோதில் அன்பர் தமையமுது செய்விப் பதற்குக் குலப்பதியில் காத லாலே தேடியுமுன் காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.
| [45] |
அடியேன் மனையில் எழுந்தருளி அமுதுசெய்ய வேண்டுமென நெடியோ னறியா வடியார்தாம் நிகழுந் தவத்தீர் உமைக்காணும் படியால் வந்தோம் உத்தரா பதியோம் எம்மைப் பரிந்தூட்ட முடியா துமக்குச் செய்கையரி தொண்ணா தென்று மொழிந்தருள.
| [46] |
எண்ணா தடியேன் மொழியேன்நீர் அமுது செய்யும் இயல்பதனைக் கண்ணார் வேட நிறைதவத்தீர் அருளிச் செய்யுங் கடிதமைக்கத் தண்ணார் இதழி முடியார்தம் அடியார் தலைப்பட் டால்தேட ஒண்ணா தனவும் உளவாகும் அருமை யில்லை யெனவுரைத்தார்.
| [47] |
அரிய தில்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற பெரிய பயிர வக்கோலப் பிரானார் அருளிச் செய்வார்யாம் பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப துரிய நாளு மதற்கின்றால் ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
| [48] |
சால நன்று முந்நிரையும் உடையேன் தாழ்விங் கெனக்கில்லை ஆலம் உண்டா ரன்பர்உமக் கமுதாம் பசுத்தான் இன்னதென ஏல வருளிச் செயப்பெற்றால் யான்போய் அமுது கடிதமைத்துக் காலந் தப்பா மேவருவேன் என்று மொழிந்து கைதொழுதார்.
| [49] |
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் நண்பு மிக்கீர் நாம்உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம் உண்ப தஞ்சு பிராயத்தில் உறுப்பின் மறுவின் றேல்இன்னம் புண்செய் நோவில் வேலெறிந்தாற் போலும் புகல்வ தொன்றென்றார்.
| [50] |
யாதும் அரிய தில்லைஇனி ஈண்ட அருளிச் செய்யுமென நாதன் தானும் ஒருகுடிக்கு நல்ல சிறுவன் ஒருமகனைத் தாதை அரியத் தாய்பிடிக்கும் பொழுது தம்மில் மனமுவந்தே ஏத மின்றி யமைத்தகறி யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
| [51] |
அதுவும் முனைவர் மொழிந்தருளக் கேட்ட தொண்டர் அடியேனுக் கிதுவும் அரிதன் றெம்பெருமான் அமுது செய்யப் பெறிலென்று கதுமென் விரைவில் அவரிசையப் பெற்றுக் களிப்பாற் காதலொடு மதுமென் கமல மலர்ப்பாதம் பணிந்து மனையின் வந்தணைந்தார்.
| [52] |
அன்பு மிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண் காட்டம்மை முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன்னின்றே இன்பம் பெருக மலர்ந்தமுகங் கண்டு பாத மிசையிறைஞ்சிப் பின்பு கணவர் முகம்நோக்கிப் பெருகுந் தவத்தோர் செயல்வினவ.
| [53] |
வள்ள லாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ள மகிழ அமுதுசெய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க் கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பிற் குறைபா டின்றித்தாய் பிள்ளை பிடிக்க வுவந்துபிதா அரிந்து சமைக்கப் பெறினென்றார்.
| [54] |
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி யுரைசெய்வார் பெரிய பயிர வத்தொண்டர் அமுது செய்யப் பெறுமதற்கிங் குரியவகையால் அமுதமைப்போம் ஒருவ னாகி ஒருகுடிக்கு வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு எவ்வா றென்று வணங்குதலும்.
| [55] |
மனைவி யார்தம் முகநோக்கி மற்றித் திறத்து மைந்தர் தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவா ருளரே நேர்நின்று தனையன் தன்னைத் தந்தைதாய் அரிவா ரில்லைத் தாழாமே எனையிங் குய்ய நீபயந்தான் தன்னை அழைப்போம் யாம்என்றார்.
| [56] |
என்று கணவர் கூறுதலும் அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர் இன்று தாழா தமுதுசெய்யப் பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம் நன்று காண்ப தெனநயந்து நம்மைக் காக்க வருமணியைச் சென்று பள்ளி யினிற்கொண்டு வாரும் என்றார் திருவனையார்.
| [57] |
காதல் மனையார் தாங்கூறக் கணவ னாருங் காதலனை ஏதம் அகலப் பெற்றபே றெல்லா மெய்தி னார்போல நாதர் தமக்கங் கமுதாக்க நறுமென் குதலை மொழிப்புதல்வன் ஓத வணைந்த பள்ளியினில் உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.
| [58] |
பள்ளி யினிற்சென் றெய்துதலும் பாத சதங்கை மணியொலிப்பப் பிள்ளை யோடி வந்தெதிரே தழுவ எடுத்துப் பியலின்மேல் கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு இல்லம் புகுதக் குலமாதர் வள்ள லார்தம் முன்சென்று மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.
| [59] |
குஞ்சி திருத்தி முகந்துடைத்துக் கொட்டை யரைநாண் துகள்நீக்கி மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப் பஞ்சி யஞ்சு மெல்லடியார் பரிந்து திருமஞ் சனமாட்டி எஞ்ச லில்லாக் கோலஞ்செய் தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
| [60] |
அச்சம் எய்திக் கறியமுதாம் என்னு மதனால் அரும்புதல்வன் உச்சி மோவார் மார்பின்கண் அணைத்தே முத்தந் தாமுண்ணார் பொச்ச மில்லாத் திருத்தொண்டர் புனிதர் தமக்குக் கறியமைக்க மெச்சு மனத்தார் அடுக்களையின் மேவார் வேறு கொண்டணைவார்.
| [61] |
ஒன்று மனத்தார் இருவர்களும் உலகர் அறியா ரெனமறைவில் சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள் நன்று கழுவிக் கொடுசெல்ல நல்ல மகனை யெடுத்துலகை வென்ற தாதை யார்தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.
| [62] |
இனிய மழலைக் கிண்கிணிக்கால் இரண்டும் மடியின் புடையிடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டுங் கையாற் பிடிக்கக் காதலனும் நனிநீ டுவகை யுறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலையரிவார்.
| [63] |
பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த் தன்மை யளித்தான் எனப்பொலிந்து மருவு மகிழ்ச்சி யெய்தஅவர் மனைவி யாருங் கணவனார் அருமை யுயிரை யெனக்களித்தான் என்று மிகவும் அகம்மலர இருவர் மனமும் பேருவகை யெய்தி அரிய வினைசெய்தார்.
| [64] |
அறுத்த தலையின் இறைச்சிதிரு வமுதுக் காகா தெனக்கழித்து மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையிற் கொடுத்து மற்றையுறுப் பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத் தெலும்பு மூளை திறந்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.
| [65] |
மட்டு விரிபூங் குழன்மடவார் அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே அட்ட கறியின் பதம்அறிந்தங் கிழிச்சி வேறோர் அருங்கலத்துப் பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றுங் கறிசமைத்துச் சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.
| [66] |
உடைய நாதர் அமுதுசெய வுரைத்த படியே அமைத்தஅதற் கடையு மின்ப முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களிகூர விடையில் வருவார் தொண்டர்தாம் விரைந்து சென்று மென்மலரின் புடைவண் டறையும் ஆத்தியின்கீழ் இருந்த புனிதர் முன்சென்றார்.
| [67] |
அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால் நண்ணி நீரிங் கமுதுசெய வேண்டு மென்று நான்பரிவு பண்ணி னேனாய்ப் பசித்தருளத் தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன் எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.
| [68] |
இறையுந் தாழா தெழுந்தருளி அமுது செய்யும் என்றிறைஞ்சக் கறையுங் கண்டத் தினின்மறைத்துக் கண்ணும் நுதலிற் காட்டாதார் நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதியிரண்டும் குறைவ னொருவன் பெற்றுவந்தாற் போலக் கொண்டு மனைபுகுந்தார்.
| [69] |
வந்து புகுந்து திருமனையின் மனைவி யார்தாம் மாதவரை முந்த எதிர்சென் றடிவணங்கி முழுதும் அழகு செய்தமனைச் சந்த மலர்மா லைகள்முத்தின் தாம நாற்றித் தவிசடுத்த கந்த மலரா சனங்காட்டிக் கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
| [70] |
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதி யார்தங் கழல்விளக்கி ஆய புனிதப் புனல்தங்கள் தலைமேல் ஆரத் தெளித்தின்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரைமென் மலர்சாந்தம் ஏயுந் தூப தீபங்கள் முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
| [71] |
பனிவெண் திங்கள் சடைவிரித்த பயில்பூங் குஞ்சிப் பயிரவராம் புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும் படிபொற்பின் வனிதை யாருங் கணவரும்முன் வணங்கிக் கேட்ப மற்றவர்தாம் இனிய அன்ன முடன்கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்கவென.
| [72] |
பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவா டையில்ஏற்றித் தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச் செழுபோ னகமுங் கறியமுதும் வரிசை யினின்முன் படைத்தெடுத்து மன்னும் பரிக லக்கான்மேல் விரிவெண் டுகிலின் மிசைவைக்க விமலர் பார்த்தங் கருள்செய்வார்.
| [73] |
சொன்ன முறையிற் படுத்தபசுத் தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு மன்னு சுவையிற் கறியாக்கி மாண அமைத்தீ ரேஎன்ன அன்ன மனையார் தலையிறைச்சி யமுதுக் காகா தெனக்கழித்தோம் என்ன வதுவுங் கூடநாம் உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.
| [74] |
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர் மனையா ரோடுந் திகைத்தயரச் சந்த னத்தா ரெனுந்தாதி யார்தாம் அந்தத் தலையிறைச்சி வந்த தொண்டர் அமுதுசெயும் பொழுது நினைக்க வருமென்றே முந்த வமைத்தேன் கறியமுதென்று எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
| [75] |
வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின் வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி ஈங்கு நமக்குத் தனியுண்ண ஒண்ணா தீசன் அடியாரிப் பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர் என்று பரமர் பணித்தருள ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய இடையூ றிதுவோ வெனநினைவார்.
| [76] |
அகத்தின் புறத்துப் போயருளால் எங்குங் காணார் அழிந்தணைந்து முகத்தில் வாட்டம் மிகப்பெருகப் பணிந்து முதல்வர்க் குரைசெய்வார் இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன் யானுந் திருநீறு சகத்தி லிடுவார் தமைக்கண்டே யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.
| [77] |
உம்மைப் போல நீறிட்டார் உளரோ வுண்பீர் நீரென்று செம்மைக் கற்பில் திருவெண்காட் டம்மை தம்மைக் கலந்திருத்தி வெம்மை இறைச்சி சோறிதனின் மீட்டுப் படையு மெனப்படைத்தார் தம்மை யூட்ட வேண்டியவர் உண்ணப் புகலுந் தடுத்தருளி.
| [78] |
ஆறு திங்கள் ஒழித்துண்போம் உண்ணு மளவுந் தரியாது சோறு நாளு முண்பீர்முன் னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை யழையுமென ஈறு முதலு மில்லா தார்க் கிப்போ துதவான் அவனென்றார்.
| [79] |
நாம்இங் குண்ப தவன்வந்தால் நாடி யழையு மெனநம்பர் தாமங் கருளிச் செயத்தரியார் தலைவ ரமுது செய்தருள யாமிங் கென்செய் தாலாகும் என்பார் விரைவுற் றெழுந்தருளால் பூமென் குழலார் தம்மோடும் புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
| [80] |
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர் மைந்தா வருவா யெனவழைத்தார் தைய லாருந் தலைவர்பணி தலைநிற் பாராய்த் தாமழைப்பார் செய்ய மணியே சீராளா வாராய் சிவனா ரடியார்யாம் உய்யும் வகையால் உடன்உண்ண அழைக்கின் றார்என்று ஓலமிட.
| [81] |
பரம ரருளாற் பள்ளியினின் றோடி வருவான் போல்வந்த தரமில் வனப்பிற் றனிப்புதல்வன் தன்னை யெடுத்துத் தழுவித்தம் கரமுன் னணைத்துக் கணவனார் கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார் புரமூன் றெரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
| [82] |
வந்த மகனைக் கடிதிற்கொண் டமுது செய்விப் பான்வந்தார் முந்த வேஅப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருளச் சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் வெந்த இறைச்சிக் கறியமுதுங் கலத்திற் காணார் வெருவுற்றார்.
| [83] |
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்த தெங்கே யெனத்தேடி மையல் கொண்டு புறத்தணைய மறைந்த அவர்தாம் மலைபயந்த தைய லோடுஞ் சரவணத்துத் தனய ரோடுந் தாமணைவார்.
| [84] |
தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில் தலைவர் பூத கணநாதர் முனிவ ரமரர் விஞ்சையர்கள் முதலா யுள்ளோர் போற்றிசைப்ப இனிய கறியுந் திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளிப் பனிவெண் திங்கள் முடிதுளங்கப் பரந்த கருணை நோக்களித்தார்.
| [85] |
அன்பின் வென்ற தொண்டரவர்க்கு அமைந்த மனைவி யார்மைந்தர் முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதுங் கண்டு பரவசமாய் என்பு மனமுங் கரைந்துருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் பின்பு பரமர் தகுதியினால் பெரியோ ரவருக் கருள்புரிவார்.
| [86] |
கொன்றை வேணி யார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும் வென்றி நெடுவேல் மைந்தரும்தம் விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரியா தேயிறைஞ்சி யிருக்க வுடன்கொண் டேகினார்.
| [87] |
ஆறு முடிமேல் அணிந்தவருக் அடியா ரென்று கறியமுதா ஊறி லாத தனிப்புதல்வன் தன்னை யரிந்தங் கமுதூட்டப் பேறு பெற்றார் சேவடிகள் தலைமேற் கொண்டு பிறவுயிர்கள் வேறு கழறிற் றறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.
| [88] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.370  
கழற்றி அறிவார் நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னுந் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழில் பயிலு மியல்பிற் பழம்பதிதான் சேவீற் றிருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியுங் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
| [1] |
காலை யெழும்பல் கலையின்ஒலி களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி சோலை யெழுமென் சுரும்பின்ஒலி துரகச் செருக்காற் சுலவும்ஒலி பாலை விபஞ்சி பயிலும்ஒலி பாட லாடல் முழவின்ஒலி வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி யோங்கும் வியப்பினதால்.
| [2] |
மிக்க செல்வ மனைகள்தொறும் விழையும் இன்பம் விளங்குவன பக்கம் நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன தக்க அணிகொள் மடங்கள்தொறும் சைவ மேன்மை சாற்றுவன தொக்க வளங்கொள் இடங்கள்தொறும் அடங்க நிதியந் துவன்றுவன.
| [3] |
வேத நெறியின் முறைபிறழா மிக்க ஒழுக்கந் தலைநின்ற சாதி நான்கும் நிலைதழைக்கும் தன்மைத் தாகித் தடமதில்சூழ் சூத வகுள சரளநிரை துதையுஞ் சோலை வளநகர்தான் கோதை யரசர் மகோதையெனக் குலவு பெயரும் உடைத்துலகில்.
| [4] |
முருகு விரியும் மலர்ச்சோலை மூதூ ரதன்கண் முறைமரபின் அருகி யழியுங் கலிநீக்கி அறங்கொள் சைவத் திறந்தழைப்பத் திருகு சினவெங் களியானைச் சேரர் குலமும் உலகுஞ்செய் பெருகு தவத்தால் அரனருளால் பிறந்தார் பெருமாக் கோதையார்.
| [5] |
திருமா நகரந் திருவவதா ரஞ்செய் விழவின் சிறப்பினால் வருமா களிகூர் நெய்யாடல் எடுப்ப வான மலர்மாரி தருமா விசும்பின் மிகநெருங்கத் தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப் பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
| [6] |
மண்மேற் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னை வழியன்பால் கண்மேல் விளங்கு நெற்றியினார் கழலே பேணுங் கருத்தினராய் உண்மே வியஅன் பினராகி யுரிமை யரசர் தொழில்புரியார் தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
| [7] |
உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதி யல்ல எனவுணர்வார் புலரி யெழுந்து புனல்மூழ்கிப் புனித வெண்ணீற் றினும்மூழ்கி நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து மலரு முகையுங் கொணர்ந்துதிரு மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.
| [8] |
திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு வலகும் இட்டுத் திருமெழுக்கு வருமன் புடன்இன் புறச்சாத்தி மற்று முள்ள திருப்பணிகள் பெருமை பிறங்கச் செய்தமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும் ஒருமை நெறியி னுணர்வுவர ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
| [9] |
நீரில் மலிந்த கடல்அகழி நெடுமால் வரையின் கொடிமதில்சூழ் சீரின் மலிந்த திருநகரம் அதனிற் செங்கோற் பொறையனெனும் காரின் மலிந்த கொடைநிழன்மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த் தாரின் மலிந்த புயத்தரசன் தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
| [10] |
வந்த மரபின் அரசளிப்பான் வனஞ்சார் தவத்தின் மருவியபின் சிந்தை மதிநூல் தேரமைச்சர் சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி முந்தை மரபின் முதல்வர்திருத் தொண்டு முயல்வார் முதற்றாக இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர்பால் எய்தினார்.
| [11] |
எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி இருந்தண் சாரல் மலைநாட்டுச் செய்தி முறைமை யால்உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு மைதீர் நெறியின் முடிசூடி யருளு மரபால் வந்ததெனப் பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
| [12] |
இன்பம் பெருகுந் திருத்தொண்டுக் கிடையூ றாக இவர்மொழிந்தார் அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்கும் அருளுண்டேல் என்பும் அரவும் புனைந்தாரை இடைபெற் றறிவே னெனப்புக்கு முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்.
| [13] |
மேவும் உரிமை அரசளித்தே விரும்பு காதல் வழிபாடும் யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும் ஈறில்லாத் தாவில் விறலுந் தண்டாத கொடையும் படைவா கனம்முதலாம் காவல் மன்னர்க் குரியனவும் எல்லாங் கைவந் துறப்பெற்றார்.
| [14] |
ஆன அருள்கொண் டஞ்சலிசெய் திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல் ஊன மாகுந் திருத்தொண்டுக் கெனினும் உடையா னருளாலே மேன்மை மகுடந் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க் குடன்படலும் மான அமைச்சர் தாம்பணிந்துஅவ் வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.
| [15] |
உரிமை நாளில் ஓரைநலன் எய்த மிக்க வுபகரணம் பெருமை சிறக்க வேண்டுவன வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய் திருமை யுலகுக் கொருமைமுடி கவித்தார் எல்லா வுயிருமகிழ் தரும நிலைமை யறிந்துபுவி தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
| [16] |
தம்பி ரானார் கோயில்வலங் கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து கும்ப யானை மேல்கொண்டு கொற்றக் குடையும் சாமரையும் நம்பும் உரிமை யவர்தாங்க நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார் மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர் வண்ணான் முன்னே வரக்கண்டார்.
| [17] |
மழையிற் கரைந்தங் குவரூறி மேனி வெளுத்த வடிவினால் உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்றுணர்ந்தே இழையிற் சிறந்த வோடைநுதல் யானைக் கழுத்தி னின்றிழிந்து விழைவிற் பெருகுங்காதலினால் விரைந்து சென்று கைதொழுதார்.
| [18] |
சேரர் பெருமான் தொழக்கண்டு சிந்தை கலங்கி முன்வணங்கி யார்என் றடியே னைக்கொண்ட தடியேன் அடிவண் ணானென்னச் சேரர் பிரானு மடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் வார வேடம் நினைப்பித்தீர் வருந்தா தேகும் எனமொழிந்தார்.
| [19] |
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதிநீடு அமைச்சரெலாம் சென்னி மிசைஅஞ் சலிசெய்து போற்றச் சினமால் களிறேறி மின்னு மணிப்பூண் கொடிமாட வீதி மூதூர் வலங்கொண்டு பொன்னின் மணிமா ளிகைவாயில் புக்கார் புனைமங் கலம்பொலிய.
| [20] |
யானை மிசைநின் றிழிந்தருளி இலங்கும் மணிமண் டபத்தின்கண் மேன்மை அரியா சனத்தேறி விளங்குங் கொற்றக் குடைநிழற்றப் பானல் விழியார் சாமரைமுன் பணிமா றப்பன் மலர்தூவி மான அரசர் போற்றிடவீற் றிருந்தார் மன்னர் பெருமானார்.
| [21] |
உலகு புரக்கும் குடைவளவர் உரிமைச் செழிய ருடன்கூட நிலவு பெருமுக் கோக்களாய் நீதி மனுநூல் நெறிநடத்தி அலகில் அரசர் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையறுத்து மலருந் திருநீற் றொளிவளர மறைகள் வளர மண்ணளிப்பார்.
| [22] |
நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும் தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற் றம்பலத்துள் ஆடுங் கழலே எனத்தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம் கூடும் அன்பில் அர்ச்சனைமேல் கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
| [23] |
வாசத் திருமஞ் சனம்பள்ளித் தாமஞ் சாந்த மணித்தூபம் தேசிற் பெருகுஞ் செழுந்தீபம் முதலா யினவும் திருவமுதும் ஈசற் கேற்ற பரிசினால் அருச்சித் தருள எந்நாளும் பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.
| [24] |
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோ ரெவர்க்கும் ஈகையினால் செம்பொன் மழையாம் எனப்பொழிந்து திருந்து வென்றி யுடன்பொருந்தி உம்பர் போற்றத் தம்பெருமாற் குரிய வேள்வி பலசெய்தார்.
| [25] |
இன்ன வண்ணம் இவரொழுக எழில்கொள் பாண்டி நன்னாட்டு மன்னும் மதுரைத் திருவால வாயில் இறைவர் வருமன்பால் பன்னும் இசைப்பா டலிற்பரவும் பாண னார்பத் திரனார்க்கு நன்மை நீடு பெருஞ்செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார்.
| [26] |
இரவு கனவில் எழுந்தருளி என்பால் அன்பால் எப்பொழுதும் பரவு சேரன் தனக்குனக்குப் பைம்பொன் காணம் பட்டாடை விரவு கதிர்செய் நவமணிப்பூண் வேண்டிற்று எல்லாங் குறைவின்றித் தரநம் மோலை தருகின்றோம் தாழா தேகி வருகென்று.
| [27] |
அதிர்கழல் உதியர் வேந்தற் கருள்செய்த பெருமை யாலே எதிரில்செல் வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க வென்று மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகங் கொடுத்தார் காண.
| [28] |
சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேற் கொண்டு பத்திரனார் அங்கப் பொழுதே புறப்பட்டு மலைநா டணைய வந்தெய்தித் துங்கப் புரிசைக் கொடுங்கோளூர் தன்னிற் புகுந்து துன்னுகொடி மங்குல் தொடக்கும் மாளிகைமுன் வந்து மன்னர்க் கறிவித்தார்.
| [29] |
கேட்ட பொழுதே கைதலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால் நாட்டம் பொழிநீர் வழிந்திழிய எழுந்து நடுக்கம் மிகவெய்தி ஓட்டத் தம்பொன் மாளிகையின் புறத்தி லுருகுஞ் சிந்தையுடன் பாட்டின் தலைமைப் பாணனார் பாதம் பலகாற் பணிகின்றார்.
| [30] |
அடியேன் பொருளாத் திருமுகங்கொண் டணைந்த தென்ன அவர் தாமும் கொடிசேர் விடையார் திருமுகங்கைக் கொடுத்து வணங்கக் கொற்றவனார் முடிமேற் கொண்டு கூத்தாடி மொழியுங் குழறிப் பொழிகண்ணீர் பொடியார் மார்பிற் பரந்துவிழப் புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
| [31] |
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படியெடுக்க உரிய வகையா லெடுத்தோதி யும்பர் பெருமா னருள்போற்றி விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு மேவும் உரிமைச் சுற்றமெலாம் பெரிது விரைவிற் கொடுபோந்து பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.
| [32] |
நங்கள் குலமா ளிகையதனுள் நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப் பொங்கி நிறைந்த பலவேறு வகையிற் பொலிந்த பண்டாரம் அங்க ணொன்று மொழியாமே அடையக் கொண்டு புறப்பட்டுத் தங்கும் பொதிசெய் தாளின்மேற் சமைய வேற்றிக் கொணருமென.
| [33] |
சேரர் பெருமான் அருள்செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள் சாரு மணிமா ளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும் சீர்கொள் நிதிய மெண்ணிறந்த வெல்லாம் பொதிசெய் தாளின்மேல் பாரில் நெருங்க மிசையேற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.
| [34] |
பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாண னார்பத் திரனார்க்கு நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி மற்றிவையும் உரந்தங் கியவெங் கரிபரிகள் முதலாம் உயிருள் ளனதனமும் புரந்த அரசுங் கொள்ளுமென மொழிந்தார் பொறையர் புரவலனார்.
| [35] |
பாண னார்பத் திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் காணக் கொடுத்த நிதியெல்லாம் கண்டு மகிழ்வுற் றதிசயித்துப் பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார் ஆணை யரசும் அரசுறுப்பும் கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
| [36] |
இறைவ ராணை மறுப்பதனுக்கு அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர் நிறையு நிதியின் பரப்பையெல்லாம் நிலத்தை நெளிய வுடன்கொண்டே உறைமும் மதத்துக் களிறுபரி யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர் பிறைவெண் கோட்டு களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.
| [37] |
பண்பு பெருகும் பெருமாளும் பாண னார்பத் திரனார்பின் கண்கள் பொழிந்த காதல்நீர் வழியக் கையால் தொழுதணைய நண்பு சிறக்கு மவர் தம்மை நகரின் புறத்து விடைகொண்டு திண்பொற் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
| [38] |
வான வரம்பர் குலம்பெருக்கும் மன்ன னாரும் அறித்தேகிக் கூனல் இளவெண் பிறைக்கண்ணி முடியா ரடிமை கொண்டருளும் பான்மை யருளின் பெருமையினை நினைந்து பலகாற் பணிந்தேத்தி மேன்மை விளங்கு மாளிகைமண் டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
| [39] |
அளவில் பெருமை அகிலயோ னிகளும் கழறிற் றறிந்தவற்றின் உளமன் னியமெய் யுறுதுயர்கள் ஒன்று மொழியா வகையகற்றிக் களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற் றறிவார்தாம் வளவர் பெருமா னுடன்செழியர் மகிழும் கலப்பில் வைகு நாள்.
| [40] |
வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத் தூநற் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு புரிவார் தமக்கொருநாள் தேனக் கலர்ந்த கொன்றையினார் ஆடற் சிலம்பின் ஒலி முன்போல் மானப் பூசை முடிவின்கண் கேளா தொழிய மதிமயங்கி.
| [41] |
பூசை கடிது முடித்தடியேன் என்னோ பிழைத்த தெனப் பொருமி ஆசை உடம்பால் மற்றினிவே றடையும் இன்பம் யாதென்று தேசின் விளங்கும் உடைவாளை யுருவித் திருமார் பினில்நாட்ட ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஒசை மிகவும் இசைப்பித்தார்.
| [42] |
ஆடல் சிலம்பின் ஒலிகேளா வுடைவா ளகற்றி யங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளிக் கொண்டு விழுந்து தொழுதெழுந்து நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறைமுன் தேடற் கரியாய் திருவருள்முன் செய்யா தொழிந்த தென்னென்றார்.
| [43] |
என்ற பொழுதில் இறைவர்தாம் எதிர்நின் றருளா தெழுமொலியால் மன்றி னிடைநங் கூத்தாடல் வந்து வணங்கி வன்றொண்டன் ஒன்று முணர்வால் நமைப்போற்றி யுரைசேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத்தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார்.
| [44] |
என்னே அடியார்க் கிவரருளும் கருணை யிருந்த வாறென்று பொன்னேர் சடையார் திருநடஞ்செய் புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித் தன்னே ரில்லா வன்றொண்டர் தமையுங் காண்பன் எனவிரும்பி நன்னீர் நாட்டுச் செலநயந்தார் நாமச் சேரர் கோமானார்.
| [45] |
பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி நன்னாள் கொண்டு பெரும்பயணம் எழுக வென்று நலஞ்சாற்ற மின்னா ரயில்வேற் குலமறவர் வென்றி நிலவுஞ் சிலைவீரர் அந்நாட் டுள்ளார் அடையநிரந் தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
| [46] |
இட்ட நன்னாள் ஓரையினில் இறைவர் திருவஞ் சைக்களத்து மட்டு விரிபூங் கொன்றையினார் தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப் பட்ட நுதல்வெங் களியானைப் பிடர்மேற் கொண்டு பனிமதியந் தொட்ட கொடிமா ளிகைமூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்.
| [47] |
யானை யணிகள் பரந்துவழி யெங்கும் நிரந்து செல்லுவன மான மலைநாட் டினின்மலிந்த மலைக ளுடன்போ துவபோன்ற சேனை வீரர் புடைபரந்து செல்வ தங்கண் மலைசூழ்ந்த கான மடைய வுடன்படர்வ போலுங் காட்சி மேவின தால்.
| [48] |
புரவித் திரள்கள் ஆயோகப் பொலிவி னசைவிற் போதுவன அரவச் சேனைக் கடற்றரங்க மடுத்து மேன்மே லடர்வனபோல் விரவிப் பரந்து சென்றனவான் மிசையு மவலு மொன்றாக நிரவிப் பரந்த நெடுஞ்சேனை நேமி நெளியச் சென்றனவால்.
| [49] |
அந்நாட் டெல்லை கடந்தணைய அமைச்சர்க் கெல்லாம் விடையருளி மின்னார் மணிப்பூண் மன்னவனார் வேண்டு வாரை யுடன்கொண்டு கொன்னார் அயில்வேல் மறவர்பயில் கொங்கு நாடு கடந்தருளிப் பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.
| [50] |
சென்ற திசையில் சிவனடியார் சிறப்பி னோடும் எதிர்கொள்ளக் குன்றும் கானும் உடைக்குறும்பர் இடங்கள் தோறுங் குறைவறுப்பத் துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து வென்றி விடையார் இடம்பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.
| [51] |
பொருவில் பொன்னித் திருநதியின் கரைவந் தெய்திப் புனிதநீர் மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி மருங்கு வடபாற் கரையேறித் திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம்போற்ற உருகி மனத்தி னுடன்சென்றார் ஒழியா அன்பின் வழிவந்தார்.
| [52] |
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் அந்த ணாளர் தொண்டர்குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கிச் சந்த விரைப்பூந் திருவீதி இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச் சிந்தை மகிழ எழுநிலைக்கோ புரத்தை யணைந்தார் சேரலனார்.
| [53] |
நிலவும் பெருமை எழுநிலைக்கோ புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி மலருங் கண்ணீர்த் துளிததும்பப் புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு உலகு விளக்குந் திருப்பேரம் பலத்தை வணங்கி யுள்ளணைந்தார் அலகில் அண்டம் அளித்தவர்நின்று ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
| [54] |
அளவில் இன்பப் பெருங்கூத்தர் ஆட எடுத்த கழல்காட்ட உளமும் புலமும் ஒருவழிச்சென்று உருகப் போற்றி யுய்கின்றார் களனில் விடம்வைத் தளித்தவமு தன்றி மன்றிற் கழல்வைத் வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.
| [55] |
ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே யமர்ந்தருளால் சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந் தாதி திருப்படிக்கீழ்ப் பார்ஆ தரிக்க எடுத்தேத்திப் பணிந்தார் பருவ மழைபொழியும் காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழறிற் றறிவார் தாம்.
| [56] |
தம்பி ரானார்க் கெதிர்நின்று தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க உம்பர் வாழ நடமாடும் ஒருவ ரதற்குப் பரிசிலெனச் செம்பொன் மணிமன் றினில்எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின் இம்பர் நீட எழுந்தவொலி தாமும் எதிரே கேட்பித்தார்.
| [57] |
ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார் அளவில் இன்ப ஆனந்தம் கூடப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார் நீடப் பணியுங் காலமெலாம் நின்று தொழுது புறம்போந்து மாடத் திருமா ளிகைவீதி வணங்கிப் புறத்து வைகினார்.
| [58] |
பரவுந் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் அரவும் புனலுஞ் சடையாட ஆடு வார்கூத் தாராமை விரவுங் காதல் மிக்கோங்க வேதம் படியும் திருப்படிக்கீழ் இரவும் பகலும் பணிந்தேத்தி இன்பம் சிறக்கும் அந்நாளில்.
| [59] |
ஆடும் பெருமான் பாடல்கேட் டருளித் தாழ்த்த படிதமக்குக் கூடும் பரிசால் முன்பருளிச் செய்த நாவ லூர்க்கோவை நீடும் பெருங்கா தலிற்காண நிறைந்த நினைவு நிரம்பமால் தேடும் பாதர் அருளினால் திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
| [60] |
அறிவின் எல்லை யாயதிருத் தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப் பிறிவி லாத திருவடியைப் பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச் செறியு ஞான போனகர்வந்து அருளும் புகலி சென்றிறைஞ்சி மறிசேர் கரத்தார் கோயில்பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
| [61] |
வழியில் குழியில் செழுவயலில் மதகில் மலர்வா விகளில்மடுச் சுழியில் தரளந் திரைசொரியுந் துறைநீர்ப் பொன்னி கடந்தேறி விழியில் திகழுந் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக் கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக் கழனி யாரூர் கண்ணுற்றார்.
| [62] |
நம்பி தாமும் அந்நாள்போய் நாகைக் காரோ ணம்பாடி அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடற்பரிமா பைம்பொற் சுரிகை முதலான பெற்று மற்றும் பலபதியில் தம்பி ரானைப் பணிந்தேத்தித் திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
| [63] |
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவா ரூர்எய்த அந்த ணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச் சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
| [64] |
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்தெடுத்தே அன்பு பெருகத் தழுவவிரைந் தவரும் ஆர்வத் தொடுதழுவ இன்ப வெள்ளத் திடைநீந்தி ஏற மாட்டா தலைவார்போல் என்பும் உருக வுயிரொன்றி யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
| [65] |
ஆன நிலைமை கண்டதிருத் தொண்டர் அளவில் மகிழ்வெய்த மானச் சேரர் பெருமானார் தாமும் வன்றொண் டருங்கலந்த பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார்பரவும் மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க் காகி விளங்கியதால்.
| [66] |
ஒருவர் ஒருவ ரிற்கலந்த வுணர்வால் இன்ப மொழியுரைத்து மருவ இனியார் பாற்செய்வ தென்னா மென்னு மகிழ்ச்சியினால் பருவ மழைச்செங் கைபற்றிக் கொண்டு பரமர் தாள்பணியத் தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேர மான்தோழர்.
| [67] |
சென்று தேவா சிரியனைமுன் இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்
உடைய நம்பி முன்னாக நின்று தொழுது கண்ணருவி வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே என்றும் இனிய தம்பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
| [68] |
தேவர் முனிவர் வந்திறைஞ்சுந் தெய்வப் பெருமாள் கழல்வணங்கி மூவர் தமக்கு முதலாகும் அவரைத் திருமும் மணிக்கோவை நாவ லூரர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார் தாவில் பெருமைச் சேரலனார் தம்பி ரானார் தாம்கொண்டார்.
| [69] |
அங்கண் அருள்பெற் றெழுவாரைக் கொண்டு புறம்போந் தாரூரர் நங்கை பரவை யார்திருமா ளிகையில் நண்ண நன்னுதலார் பொங்கு விளக்கும் நிறைகுடமும் பூமா லைகளும் புகையகிலும் எங்கும் மடவார் எடுத்தேத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
| [70] |
சோதி மணிமா ளிகையின்கண் சுடரும் பசும்பொற் கால்அமளி மீது பெருமாள் தமையிருத்தி நம்பி மேவி யுடனிருப்பக் கோதில் குணத்துப் பரவையார் கொழுந னார்க்குந் தோழர்க்கும் நீதி வழுவா ஒழுக்கத்து நிறைபூ சனைகள் முறையளித்தார்.
| [71] |
தாண்டு புரவிச் சேரர்குலப் பெருமாள் தமக்குத் திருவமுது தூண்டு சோதி விளக்கனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும் வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும் ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க் கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.
| [72] |
அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல் அடியார்க் கேற்கும் படியாக விரவிப் பெருகும் அன்பினுடன் விரும்பும் அமுது சமைத்ததற்பின் புரசைக் களிற்றுச் சேரலனார் புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப் பரவைப் பிறந்த திருவனைய பரவை யார்வந் தறிவித்தார்.
| [73] |
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்யச் செய்தவத்தால் தாரின் மலிபூங் குழல்மடவாய் தாழா தமுது செய்வியெனப் பாரின் மலிசீர் வன்றொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருக்கரத்தில் இரண்டு படியா ஏற்றுதலும்.
| [74] |
ஆண்ட நம்பி பெருமாளை யுடனே யமுது செய்தருள வேண்டு மென்ன ஆங்கவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் நேரே குறைகொள்ள ஈண்ட அமுது செய்வதனுக் கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.
| [75] |
ஒக்க அமுது செய்தருள வுயர்ந்த தவத்துப் பரவையார் மிக்க விருப்பால் அமுது செய்வித் தருளி மேவும் பரிசனங்கள் தக்க வகையால் அறுசுவையுந் தாம்வேண் டியவா றினிதருந்தத் தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத் தூயவிருந்தின் கடன்முடித்தார்.
| [76] |
பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப் பூர விரைக்கலவை வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும் புனித நறும்பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார் இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுது மேந்தினார்.
| [77] |
ஆய சிறப்பிற் பூசனைகள் அளித்த வெல்லாம் அமர்ந்தருளித் தூய நீறு தங்கள்திரு முடியில் வாங்கித் தொழுதணிந்து மேய விருப்பி னுடனிருப்பக் கழறிற் றறிவார் மெய்த்தொண்டின் சேய நீர்மை யடைந்தாராய் நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
| [78] |
மலைநாட் டரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர்தழுவிக் கலைநாட் பெருகு மதிமுகத்துப் பரவை யார்தங் கணவனார் சிலைநாட் டியவெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக்கங்கை அலைநாட் கொன்றை முடிச்சடையார் அருளே போற்றி யுடனமர்ந்தார்.
| [79] |
செல்வத் திருவா ரூர்மேவும் செம்பொற் புற்றில் இனிதமர்ந்த வில்வெற் புடையார் கழல்வணங்கி வீதி விடங்கப் பெருமானை மல்லற் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து சொல்வித் தகர்தாம் இருவர்களுந் தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.
| [80] |
இவ்வா றொழுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்றொண்டர் மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச் செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
| [81] |
சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும் வாரம் பெருகத் தமக்கன்று மதுரை யால வாயமர்ந்த வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பில் வணங்குதற்குச் சார வெழுந்த குறிப்பாலுந் தாமும் உடனே செலத்துணிந்தார்.
| [82] |
இருவர் திருவுள் ளமும்இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி யுடன்பாட் டருளாற் போந்தருளி மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள் பொருவில் பண்டா ரங்கொண்டு போது வார்கள் உடன்போத.
| [83] |
சேவித் தணையும் பரிசனங்கள் சூழத் திருவா ரூர்இறைஞ்சிக் காவிற் பயிலும் புறம்பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர் மேவிப் பரமர் கழல்வணங்கிப் போந்து வேலைக் கழிக்கானல் பூவில் திகழும் பொழில்நாகை புகுந்து காரோ ணம்பணிந்தார்.
| [84] |
திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை உருக்கார் வச்செந் தமிழ்மாலை சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப் பெருக்கா றுலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்தேத்தி அருட்கா ரணர்தந் திருமறைக்கா டணைந்தார் சேர ராரூரர்.
| [85] |
முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்றெய்திச் செந்நீர் வாய்மைத் திருநாவுக் கரசும் புகலிச் சிவக்கன்றும் அந்நேர் திறக்க அடைக்கவெனப் பாடுந் திருவா யிலையணைந்து நன்னீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்திறைஞ்சி.
| [86] |
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட் டருமணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து போற்றி யாழைப் பழித்தென்னும் அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருட்சேரர் சிறந்த அந்தா தியிற்சிறப்பித் தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
| [87] |
எழுந்து பணிந்து புறத்தெய்தி இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள் செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ் சழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக் கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர் கோடிக் கோயில் குறுகினார்.
| [88] |
கோடிக் குழகர் கோயில்அயல் குடிக ளொன்றும் புறத்தெங்கும் நாடிக் காணா துள்புக்கு நம்பர் பாதந் தொழுதுள்ளம் வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று எடுத்து மலர்க்கண் ணீர்வாரப் பாடிக் காடு காள்புணர்ந்த பரிசும் பதிகத் திடைவைத்தார்.
| [89] |
அங்கு வைகிப் பணிந்தருளால் போவார் அகன்சோ ணாட்டரனார் தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப் பாண்டி நாடு தனைச்சார்ந்து திங்கண் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்தணைந்தார்.
| [90] |
சேரமான் தோழரும்அச் சேரர்பிரா னும்பணிப்பூண் ஆரமார் பரைமதுரை ஆலவா யினில்வணங்க வாரமா வந்தணைய வழுதியார் மனக்காதல் கூரமா நகர்கோடித் தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
| [91] |
தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார் அன்னவர்க ளுடன்கூட அணையஅவ ருங்கூடி மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்.
| [92] |
திருவால வாய்அமர்ந்த செஞ்சடையார் கோயில்வலம் வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி வன்றொண்டர் வழித்தொண்டு தருவாரைப் போற்றிசைத்துத் தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப் பெருவாய்மை மலர்புனைந்து பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
| [93] |
படியேறு புகழ்ச்சேரர் பெருமானும் பார்மிசைவீழ்ந் தடியேனைப் பொருளாக அளித்ததிரு முகக்கருணை முடிவுஏதென் றறிந்திலேன் எனமொழிகள் தடுமாறக் கடியேறு கொன்றையார் முன்பரவிக் களிகூர்ந்தார்.
| [94] |
செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன் நம்பியும்முன் புறத்தணைய நண்ணியபே ருவகையால் உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோ யிருவர்க்கும் பைம்பொன்மணி மாளிகையிற் குறைவறுத்தார் பஞ்சவனார்.
| [95] |
உளம்மகிழக் கும்பிட்டங் குறையுநாள் உதியருடன் கிளரொளிப்பூண் வன்றொண்டர் தாமிருந்த இடங்கெழுமி வளவனார் மீனவனார் வளம்பெருக மற்றவரோ டளவளா வியவிருப்பால் அமர்ந்துகலந் தினிதிருந்தார்.
| [96] |
அந்நாளில் மதுரைநகர் மருங்கரனார் அமர்பதிகள் பொன்னாரம் மணிமார்பிற் புரவலர்மூ வரும்போதச் செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்றிறைஞ்சிச் சொன்மாலை களுஞ்சாத்தித் தொழத்திருப்பூ வணத்தணைவார்.
| [97] |
நீடுதிருப் பூவணத்துக் கணித்தாக நேர்செல்ல மாடுவருந் திருத்தொண்டர் மன்னியஅப் பதிகாட்டத் தேடுமறைக் கரியாரைத் திருவுடையார் என்றெடுத்துப் பாடிசையிற் பூவணமீ தோவென்று பணிந்தணைவார்.
| [98] |
சென்றுதிருப் பூவணத்துத் தேவர்பிரான் மகிழ்கோயில் முன்றில்வலங் கொண்டிறைவர் முன்வீழ்ந்து பணிந்தெழுந்து நின்றுபர விப்பாடி
| [99] |
அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச் சிலநாளில் ஆரூரர் முப்பெருவேந் தர்களோடு முதன்மதுரை நகரெய்தி மெய்ப்பரிவில் திருவால வாயுடையார் விரைமலர்த்தாள் எப்பொழுதும் பணிந்தேத்தி இன்புற்றங் கமர்கின்றார்.
| [100] |
செஞ்சடையார் திருவாப்ப னூர்திருவே டகம்முதலாம் நஞ்சணியுங் கண்டரவர் நயந்தபதி நண்ணியே எஞ்சலிலாக் காதலினால் இனிதிறைஞ்சி மீண்டணைந்து மஞ்சணையும் மதில்மதுரை மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
| [101] |
பரமர்திருப் பரங்குன்றில் சென்றுபார்த் திபரோடும் புரமெரித்தார் கோயில்வலங் கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச் சிரமலிமா லைச்சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும் அருமைநினைந் தஞ்சுதும்என் றாரூரர் பாடுவார்.
| [102] |
கோத்திட்டை எனஎடுத்துக் கோதில்திருப் பதிகவிசை மூர்த்தியார் தமைவணங்கி முக்கோக்கள் தம்முன்பே ஏத்தியவண் டமிழ்மாலை இன்னிசைபா டிப்பரவிச் சாத்தினார் சங்கரனார் தங்குதிருப் பரங்குன்றில்.
| [103] |
இறைவர்திருத் தொண்டுபுரி யருமையினை இருநிலத்து முறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டஞ்சி மறைமுந்நூல் மணிமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார் நிறைதவத்தோர் அப்பாலும் நிருத்தர்பதி தொழநினைந்தார்.
| [104] |
அந்நாட்டுத் திருப்பதிகள் பலவும்அணைந்து இறைஞ்சமலை நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்தருள மின்னாட்டும் பன்மணிப்பூண் வேந்தர்இரு வருமீள்வார் தென்னாட்டு வேண்டுவன செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
| [105] |
இருபெருவேந் தரும்இயல்பின் மீண்டதற்பின் எழுந்தருளும் பொருவருஞ்சீர் வன்றொண்டர் புகழ்ச்சேர ருடன்புனிதர் மருவியதா னம்பலவும் பணிந்துபோய் மலைச்சாரல் குருமணிகள் வெயிலெறிக்கும் குற்றாலஞ் சென்றடைந்தார்.
| [106] |
குற்றாலத் தினிதமர்ந்த கூத்தர்குரை கழல்வணங்கிச் சொல்தாம மலர்புனைந்து குறும்பலாத் தொழுதிப்பால் முற்றாவெண் மதிமுடியார் பதிபணிந்து மூவெயில்கள் செற்றார்மன் னியசெல்வத் திருநெல்வே லியையணைந்தார்.
| [107] |
நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ் பல்வேறு பதிபிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார் வில்வேட ராய்வென்றி விசயன்எதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து.
| [108] |
மன்னும்இரா மேச்சரத்து மாமணியை முன்வணங்கிப் பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பணிந்த சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச் சரஞ்சார்ந்து சொன்மலர்மா லைகள்சாத்தித் தூரத்தே தொழுதமர்ந்தார்.
| [109] |
திருஇரா மேச்சரத்துச் செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப் பரிவினால் தொழுதகன்று பரமர்பதி பிறபணிந்து பெருவிமா னத்திமையோர் வணங்குபெருந் திருச்சுழியல் மருவினார் வன்றொண்டர் மலைவேந்த ருடன்கூட.
| [110] |
திருச்சுழியல் இடங்கொண்ட செம்பொன்மலைச் சிலையாரைக் கருச்சுழியின் வீழாமைக்
| [111] |
அங்கணரைப் பணிந்துறையும் ஆரூரர்க் கவ்வூரில் கங்குலிடைக் கனவின்கண் காளையாந் திருவடிவால் செங்கையினிற் பொற்செண்டுந் திருமுடியிற் சுழியமுடன் எங்குமிலாத் திருவேடம் என்புருக முன்காட்டி.
| [112] |
கானப்பேர் யாம்இருப்ப தெனக்கழறிக் கங்கையெனும் வானப்பே ராறுலவும் மாமுடியார் தாம்அகல ஞானப்பே ராளர்உணர்ந் ததிசயித்து நாகமுடன் ஏனப்பே ரெயிறணிந்தார் அருளிருந்த பரிசென்பார்.
| [113] |
கண்டருளும் படிகழறிற்
| [114] |
காளையார் தமைக்கண்டு தொழப்பெறுவ தென்றென்று தாளைநா ளும்பரவத் தருவார்பாற் சார்கின்றார் ஆளைநீ ளிடைக்காண வஞ்சியநீர் நாயயலே வாளைபாய் நுழைப்பழன முனைப்பாடி வளநாடர்.
| [115] |
மன்னுதிருக் கானப்பேர் வளம்பதியில் வந்தெய்திச் சென்னிவளர் மதியணிந்தார் செழுங்கோயில் வலங்கொண்டு முன்னிறைஞ்சி யுள்ளணைந்து முதல்வர்சே வடிதாழ்ந்து பன்னுசெழுந் தமிழ்மாலை பாடினார் பரவினார்.
| [116] |
ஆராத காதலுட னப்பதியிற் பணிந்தேத்திச் சீராருந் திருத்தொண்டர் சிலநாளங் கமர்ந்தருளிக் காராரு மலர்ச்சோலைக் கானப்பேர் கடந்தணைந்தார் போரானேற் றார்கயிலைப் பொருப்பர்திருப் புனவாயில்.
| [117] |
புனவாயிற் பதியமர்ந்த புனிதரா லயம்புக்கு மனவார்வம் உறச்சித்த நீநினைஎன் னொடுஎன்று வினவான தமிழ்பாடி வீழ்ந்திறைஞ்சி யப்பதியில் சினவானை யுரித்தணிந்தார் திருப்பாதந் தொழுதிருந்தார்.
| [118] |
திருப்புனவா யிற்பதியில் அமர்ந்தசிவ னார்மகிழும் விருப்புடைய கோயில்பல பணிந்தருளால் மேவினார் பொருப்பினொடு கான்அகன்று புனற்பொன்னி நாடணைந்து பருப்பதவார் சிலையார்தம் பாம்பணிமா நகர்தன்னில்.
| [119] |
பாதாளீச் சரமிறைஞ்சி அதன்மருங்கு பலபதியும் வேதாதி நாதர்கழல் வணங்கிமிகு விரைவினுடன் சூதாருந் துணைமுலையார் மணிவாய்க்குத் தோற்றிரவு சேதாம்பல் வாய்திறக்குந் திருவாரூர் சென்றணைந்தார்.
| [120] |
திருநாவ லூர்வேந்தர்
| [121] |
வாசமலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலங்கொண்டு நேசமுற முன்னிறைஞ்சி நெடும்பொழுதெ லாம்பரவி ஏசறவால் திருப்பதிகம் எடுத்தேத்தி எழுந்தருளால் பாசவினைத் தொடக்கறுப்பார் பயில்கோயில் பணிந்தணைவார்.
| [122] |
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன்னெய்த விரவுபே ரலங்கார விழுச்செல்வம் மிகப்பெருக வரவெதிர்கொண் டடிவணங்க வன்றொண்டர் மலைநாட்டுப் புரவலனா ரையுங்கொண்டு பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
| [123] |
பரவியே பரவையார் பரிவுடனே பணிந்தேத்தி விரவியபோ னகங்கறிகள் விதம்பலவா கச்சமைத்துப் பரிகலமும் பாவாடை பகல்விளக்கும் உடனமைத்துத் திருவமுது செய்வித்தார் திருந்தியதேன் மொழியினார்.
| [124] |
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செயமகிழ்ந்து தங்கியினி தமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் பொங்குபெருங் காலமெலாம் புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து நங்கள்பிரா னருள்மறவா நல்விளையாட் டினைநயந்தார்.
| [125] |
நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல் கண்டருளி வென்றிபெற மலைக்கு நெடு முட்கணைக்கால் வாரணப்போர் மகிழ்ந்தருளி அலைக்குமறப் பலபுள்ளின் அமர்விரும்பி யமர்கின்றார்.
| [126] |
விரவு காதல் மீக்கூர மேவு நாள்கள் பலசெல்லக் கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப் பரவை யார்தங் கொழுநனார் தம்மைப் பனிந்து கொண்டணைவான் இரவும் பகலுந் தொழுதிரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள.
| [127] |
நங்கை பரவை யார்உள்ளத் திசைவால் நம்பி யெழுந்தருளத் திங்கள் முடியார் திருவருளைப் பரவிச் சேர மான்பெருமாள் எங்கும் உள்ள அடியாருக் கேற்ற பூசை செய்தருளிப் பொங்கு முயற்சி இருவரும்போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.
| [128] |
தம்பி ரானைத் தொழுதருளால் போந்து தொண்டர் சார்ந்தணைய நம்பி யாரூ ரருஞ்சேரர் நன்னாட் டரச னாராகும் பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற் றறிவார் தாமும் பயணமுடன் செம்பொன் நீடு மதிலாரூர் தொழுது மேல்பாற் செல்கின்றார்.
| [129] |
பொன்பரப்பி மணிவரன்றிப் புனல்பரக்குங் காவேரித் தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த கோயில்பல சென்றிறைஞ்சி மின்பரப்புஞ் சடையண்ணல் விரும்புதிருக் கண்டியூர் அன்புருக்குஞ் சிந்தையுடன் பணிந்துபுறத் தணைந்தார்கள்.
| [130] |
வடகரையில் திருவையா றெதிர்தோன்ற மலர்க்கரங்கள் உடலுருக வுள்ளுருக வுச்சியின்மேற் குவித்தருளிக் கடல்பரந்த தெனப்பெருகுங் காவிரியைக் கடந்தேறித் தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.
| [131] |
ஐயா றதனைக் கண்டுதொழு தருளா ரூரர் தமைநோக்கிச் செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் மையார் கண்டர் மருவுதிரு வையா றிறைஞ்ச மனமுருகி நையா நின்ற திவ்வாறு கடந்து பணிவோம் நாமென்ன.
| [132] |
ஆறு பெருகி இருகரையும் பொருது விசும்பில் எழுவதுபோல் வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகைமிகைப்ப நீறு விளங்குந் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் ஆறு நெறியாச் செலவுரியார் தரியா தழைத்துப் பாடுவார்.
| [133] |
பரவும் பரிசொன் றெடுத்தருளிப் பாடுந் திருப்பாட் டின்முடிவில் அரவம் புனைவார் தமைஐயா றுடைய வடிக ளோவென்று விரவும் வேட்கை யுடனழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் நிரவு மிசையில் வன்றொண்டர் நின்று தொழுது பாடுதலும்.
| [134] |
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் ஒன்று முணர்வால் சராசரங்கள் எல்லாங் கேட்க வோலமென நின்று மொழிந்தார் பொன்னிமா நதியு நீங்கி நெறிகாட்ட.
| [135] |
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பாற் பளிக்கு வெற்பென்ன நண்ணி நிற்கக் கீழ்பால்நீர் வடிந்த நடுவு நல்லவழி பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக் கண்ட தொண்டர் பயில்மாரி கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங் கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.
| [136] |
நம்பி பாதஞ் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச் செம்பொன் முந்நூன் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி உம்பர் நாதர் உமக்களித்த தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து தம்பி ரானைப் போற்றிசைத்துத் தடங்கா வேரி நடுவணைந்தார்.
| [137] |
செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும் சேரர் பிரானும் தம்பெருமான் எஞ்ச லில்லா நிறைஆற்றின் இடையே யளித்த மணல்வழியில் தஞ்ச முடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று பஞ்ச நதிவா ணரைப்பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்.
| [138] |
அங்கண் அரனார் கருணையினை ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித் தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப் பொங்கு நதியின் முன்வந்த படியே நடுவு போந்தேறத் துங்க வரைபோல் நின்றநீர் துரந்து தொடரப் பெருகியதால்.
| [139] |
ஆய செயலின் அதிசயத்தைக் கண்டக் கரையில் ஐயாறு மேய பெருமான் அருள்போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த் தூய மதிவாழ்சடையார்தம் பதிகள் பிறவுந் தொழுதேத்திச் சேய கொங்கர் நாடணைந்தார் திருவா ரூரர் சேரருடன்.
| [140] |
கொங்கு நாடு கடந்துபோய்க் குலவு மலைநாட் டெல்லையுற நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பி ரான்தோழர் அங்க ணுடனே யணையவெழுந்து அருளா நின்றார் எனும்விருப்பால் எங்கும் அந்நாட் டுள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.
| [141] |
பதிகள் எங்குந் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள் வதிகள் எங்குங் குளிர்பந்தர் மனைகள் எங்கும் அகிற்புகைக்கார் நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன நிதிகள் எங்கும் முழவினொலி நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.
| [142] |
திசைகள் தோறும் வரும்பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம் குசைகொள் வாசி நிரைவெள்ளங் கும்ப யானை யணிவெள்ளம் மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவுஞ் சோற்று வெள்ளங்கண் டசைவி லின்பப் பெருவெள்ளத் தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.
| [143] |
கொடுங்கோ ளூரின் மதில்வாயில் அணிகோ டித்து மறுகில்உடுத் தொடுங்கோ புரங்கள் மாளிகைகள் சூளி குளிர்சா லைகள்தெற்றி நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு நிரந்த மணித்தா மங்கமுகு விடுங்கோ தைப்பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வே றலங்கரித்து.
| [144] |
நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்ணில் அரங்குதொறும் மகரக் குழைமா தர்கள்பாடி ஆட மணிவீ தியிலணைவார் சிகர நெடுமா ளிகையணையார் சென்று திருவஞ் சைக்களத்து நிகரில் தொண்டர் தமைக்கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
| [145] |
இறைவர் கோயில் மணிமுன்றில் வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு நிறையுங் காத லுடன்வீழ்ந்து பணிந்து நேர்நின் றாரூரர் முறையில் விளம்புந் திருப்பதிகம் முடிப்பது கங்கை யென்றெடுத்தப் பிறைகொள் முடியார் தமைப்பாடிப் பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
| [146] |
தொழுது திளைத்துப் புறம்போந்து தோன்றப் பண்ணும் பிடிமேல்பார் முழுதும் ஏத்த நம்பியைமுன் பேற்றிப் பின்பு தாம்ஏறிப் பழுதின் மணிச்சா மரைவீசிப் பைம்பொன் மணிமா ளிகையில்வரும் பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
| [147] |
நல்ல தோழர் நம்பெருமாள் தமக்கு நம்பி இவரென்பார் எல்லை யில்லாத் தவம்முன்பென் செய்தோம் இவரைத் தொழவென்பார் செல்வம் இனியென் பெறுவது நம் சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார் சொல்லுந் தரமோ பெருமாள்செய் தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
| [148] |
பூவும் பொரியும் பொற்றுகளும் பொழிந்து பணிவார் பொருவில்இவர் மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் எனவியப்பார் பாவுந் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் மாவுங் களிறும் நெருங்குமணி வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.
| [149] |
கழறிற் றறியுந் திருவடியும் கலைநா வலர்தம் பெருமானாம் முழவிற் பொலியுந் திருநெடுந்தோள் முனைவர் தம்மை யுடன்கொண்டு விழவிற் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்கா சனத்தின்மிசை நிழல்திக் கொளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர்நின்று.
| [150] |
செம்பொற் கரக வாசநீர் தேவி மார்கள் எடுத்தேந்த அம்பொற் பாதந் தாம்விளக்கி யருளப் புகலும் ஆரூரர் தம்பொன் தாளை வாங்கியிது தகாதென் றருளத் தரணியில்வீழ்ந் தெம்பெற் றிமையாற் செய்தனஈங் கெல்லாம் இசைய வேண்டுமென.
| [151] |
பெருமாள் வேண்ட எதிர்மறுக்க மாட்டார் அன்பின் பெருந்தகையார் திருமா நெடுந்தோள் உதியர்பிரான் செய்த வெல்லாங் கண்டிருந்தார் அருமா னங்கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்ததற்பின் ஒருமா மதிவெண் குடைவேந்த ருடனே அமுது செய்துவந்தார்.
| [152] |
சேர ருடனே திருவமுது செய்த பின்பு கைகோட்டி ஆரம் நறுமென் கலவைமான் மதச்சாந் தாடை யணிமணிப்பூண் ஈர விரைமென் மலர்ப்பணிகள் இனைய முதலா யினவருக்கம் சார வெடுத்து வன்தொண்டர்ச் சாத்தி மிக்க தமக்காக்கி.
| [153] |
பாடல் ஆட ல் இன்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினில் நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலந் தொறும்நிகழ மாடு விரைப்பூந் தருமணஞ்செய் ஆரா மங்கள் வைகுவித்ததுக் கூட முனைப்பா டியர்கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
| [154] |
செண்டாடும் தொழின்மகிழ்வும் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும் வண்டாடும் மலர்வாவி மருவியநீர் விளையாட்டும் தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர் கண்டாரா விருப்பெய்தக் காவலனார் காதல்செய்நாள்.
| [155] |
நாவலர்தம் பெருமானும் திருவாரூர் நகராளும் தேவர்பிரான் கழல்ஒருநாள் மிகநினைந்த சிந்தையராய் ஆவியைஆ ரூரானை மறக்கலுமா மேஎன்னும் மேவியசொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.
| [156] |
திருவாரூர் தனைநினைந்து சென்றுதொழு வேன்என்று மருவுஆர்வத் தொண்டருடன் வழிக்கொண்டு செல்பொழுதில் ஒருவாநண் புள்ளுருக வுடனெழுந்து கைதொழுது பெருவான வரம்பனார் பிரிவாற்றார் பின்செல்வார்.
| [157] |
வன்றொண்டர் முன்எய்தி மனமழிந்த வுணர்வினராய் இன்றுமது பிரிவாற்றேன் என்செய்கேன் யான்என்ன ஒன்றும்நீர் வருந்தாதே யுமதுபதி யின்கணிருந் தன்றினார் முனைமுருக்கி அரசாளும் எனமொழிந்தார்.
| [158] |
ஆரூரர் மொழிந்தருள அதுகேட்ட அருட்சேரர் பாரோடு விசும்பாட்சி எனக்குமது பாதமலர் தேரூரும் நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள நேரூரு மனக்காதல் நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
| [159] |
மன்னவனார் அதுமொழிய வன்றொண்டர் எதிர்மொழிவார் என்னுயிருக் கின்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன் மதியணிந்தார் இன்னருளால் அரசளிப்பீர் நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
| [160] |
மற்றவரும் பணிந்திசைந்தே மந்திரிகள் தமையழைத்துப் பொற்புநிறை தொன்னகரில் இற்றைக்கு முன்புகுந்த நற்பெரும்பண் டாரநா னாவருக்க மானவெலாம் பற்பலவாம் ஆளின்மிசை ஏற்றிவரப் பண்ணும்என.
| [161] |
ஆங்கவரும் அன்றுவரை ஆயமா கியதனங்கள் ஓங்கியபொன் நவமணிகள் ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம் ஞாங்கர்நிறை விரையுறுப்பு வருக்கமுதல் நலஞ்சிறப்பத் தாங்குபொதி வினைஞர்மேல் தலம்மலியக் கொண்டணைந்தார்.
| [162] |
மற்றவற்றின் பரப்பெல்லாம் வன்றொண்டர் பரிசனத்தின் முற்படவே செலவிட்டு முனைப்பாடித் திருநாடர் பொற்பதங்கள் பணிந்தவரைத் தொழுதெடுத்துப் புனையலங்கல் வெற்பியர்தோ ளுறத்தழுவி விடையளித்தார் வன்றொண்டர்.
| [163] |
ஆரூரர் அவர்தமக்கு விடையருளி அங்ககன்று காரூரும் மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும் நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழியச் சீரூருந் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்.
| [164] |
திருமுருகன் பூண்டிஅயல் செல்கின்ற போழ்தின்கண் பொருவிடையார் நம்பிக்குத் தாமேபொன் கொடுப்பதலால் ஒருவர்கொடுப் பக்கொள்ள ஒண்ணாமைக் கதுவாங்கி பெருகருளால் தாங்கொடுக்கப் பெறுவதற்கோ அதுஅறியோம்.
| [165] |
வென்றிமிகு பூதங்கள் வேடர்வடி வாய்ச்சென்று வன்றொண்டர் பண்டாரங் கவரஅருள் வைத்தருள அன்றினார் புரமெரித்தார் அருளால்வேட் டுவப்படையாய்ச் சென்றவர்தாம் வரும்வழியில் இருபாலும் செயிர்த்தெழுந்து.
| [166] |
வில்வாங்கி அலகம்பு விசைநாணில் சந்தித்துக் கொல்வோம்இங் கிட்டுப்போம் எனக்கோபத் தாற்குத்தி எல்லையில்பண் டாரமெலாங் கவர்ந்துகொள இரிந்தோடி அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கணைந்தார்.
| [167] |
ஆரூரர் தம்பால்அவ் வேடுவர்சென் றணையாதே நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்கஅவர் சேர்ஊராந் திருமுருகன் பூண்டியினிற் சென்றெய்திப் போரூரும் மழவிடையார் கோயிலைநா டிப்புக்கார்.
| [168] |
அங்கணர்தங் கோயிலினை அஞ்சலிகூப் பித்தொழுது மங்குலுற நீண்டதிரு வாயிலினை வந்திறைஞ்சிப் பொங்குவிருப் புடன்புக்கு வலங்கொண்டு புனிதநதி திங்கள்முடிக் கணிந்தவர்தந் திருமுன்பு சென்றணைந்தார்.
| [169] |
உருகியஅன் பொடுகைகள் குவித்துவிழுந் துமைபாகம் மருவியதம் பெருமான்முன் வன்றொண்டர் பாடினார் வெருவுறவே டுவர்பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கிங் கருகிருந்தீர் எனக்கொடுகு வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.
| [170] |
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவரருளால் வேடுவர் தாம் பறித்தபொரு ளவையெல்லாம் விண்ணெருங்க நீடுதிரு வாயிலின்முன் குவித்திடலும் நேரிறைஞ்சி ஆடுமவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார்.
| [171] |
கைக்கொண்டு கொடுபோம்அக் கைவினைஞர் தமையேவி மைக்கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்ககன்று மெய்க்கொண்ட காதலினால் விரைந்தேகி மென்கரும்பும் செய்க்கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்றணைந்தார்.
| [172] |
நாவலர்மன் னவர்அருளால் விடைகொண்ட நரபதியார் ஆவியின்ஒன் றாநண்பின் ஆரூரர் தமைநினைந்து மாவலரு மலர்ச்சோலை மகோதையினின் மன்னிமலைப் பூவலயம் பொதுநீக்கி அரசுரிமை புரிந்திருந்தார்.
| [173] |
இந்நிலைமை யுதியர்பிரான் எம்பிரான் வன்றொண்டர் பொன்னிவள நாடகன்று மகோதையினின் மேற்புகுந்து மன்னுதிருக் கயிலையினின் மதவரைமேல் எழுந்தருள முன்னர்வயப் பரியுகைக்குந் திருத்தொழில்பின் மொழிகின்றாம்.
| [174] |
மலைமலிந்த திருநாட்டு மன்னவனார் மாகடல்போல் சிலைமலிந்த கொடித்தானைச் சேரலனார் கழல்போற்றி நிலைமலிந்த மணிமாட நீண்மறுகு நான்மறைசூழ் கலைமலிந்த புகழ்க்காழிக் கணநாதர் திறமுரைப்பாம்.
| [175] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.380  
கணநாத நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆழி மாநிலத் தகிலம்ஈன் றளித்தவள் திருமுலை யமுதுண்ட வாழி ஞானசம் பந்தர்வந் தருளிய வனப்பின தளப்பில்லா ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்துல கினுக்கொரு முதலாய காழி மாநகர்த் திருமறை யவர் குலக் காவலர் கணநாதர்.
| [1] |
ஆய அன்பர்தாம் அணிமதில் சண்பையி லமர்பெருந் திருத்தோணி நாய னார்க்குநல் திருப்பணி யாயின நாளும்அன் பொடுசெய்து மேய அத்திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத் தூய கைத்திருத் தொண்டினில் அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
| [2] |
நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர் பல்ம லர்த்தொடை புனைபவர் கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர் அல்லும் நண்பக லும் திரு வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள் எல்லை யில்விளக் கெரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.
| [3] |
இனைய பல்திருப் பணிகளில் அணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின் வினைவி ளங்கிட வேண்டிய குறையெலாம் முடித்துமே விடச்செய்தே அனைய அத்திறம் புரிதலில் தொண்டரை யாக்கிஅன் புறுவாய்மை மனைய றம்புரிந் தடியவர்க் கின்புற வழிபடுந் தொழில்மிக்கார்.
| [4] |
இப்பெ ருஞ்சிறப் பெய்திய தொண்டர்தாம் ஏறுசீர் வளர்காழி மெய்ப்பெ ருந்திரு ஞானபோ னகர்கழல் மேவிய விருப்பாலே முப்பெ ரும்பொழு தருச்சனை வழிபாடு மூளும்அன் பொடுநாளும் ஒப்பில் காதல்கூர் உளங்களி சிறந்திட வொழுகினார் வழுவாமல்.
| [5] |
ஆன தொண்டினில் அமர்ந்தபேர் அன்பரும் அகலிடத் தினில்என்றும் ஞான முண்டவர் புண்டரீ கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத் தூந றுங்கொன்றை முடியவர் சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி மான நற்பெருங் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.
| [6] |
உலகம் உய்யநஞ் சுண்டவர் தொண்டினில் உறுதிமெய் யுணர்வெய்தி அலகில் தொண்டருக் கறிவளித் தவர்திற மவனியின் மிசையாக்கும் மலர்பெ ரும்புகழ்ப் புகலியில் வருங்கண நாதனார் கழல் வாழ்த்திக் குலவு நீற்றுவண் கூற்றுவ னார்திறங் கொள்கையின் மொழிகின்றாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12.390  
கூற்றுவ நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார்தம் நன்னா மம்தம் திருநாவில் நாளும் நவிலும் நலமிக்கார் பன்னாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி முன்னா கியநல் திருத்தொண்டில் முயன்றார் களந்தை முதல்வனார்.
| [1] |
அருளின் வலியால் அரசொதுங்க அவனி யெல்லாம் அடிப்படுப்பார் பொருளின் முடிவுங் காண்பரிய வகையால் பொலிவித் திகல்சிறக்க மருளுங் களிறு பாய்புரவி மணித்தேர் படைஞர் முதல்மாற்றார் வெருளுங் கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார்.
| [2] |
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச் சென்று தும்பைத் துறைமுடித்துச் செருவில் வாகைத் திறங்கெழுமி மன்றல் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாங் கவர்ந்துமுடி ஒன்றும் ஒழிய அரசர்திரு வெல்லாம் உடைய ராயினார்.
| [3] |
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத் தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடியென்று நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா டணைய நண்ணுவார்.
| [4] |
ஒருமை யுரிமைத் தில்லைவாழந் தணர்கள் தம்மில் ஒருகுடியைப் பெருமை முடியை யருமைபுரி காவல் பேணும் படியிருத்தி இருமை மரபுந் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின் வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து மன்று ளாடுங் கழல்பணிவார்.
| [5] |
அற்றை நாளில் இரவின்கண் அடியேன் தனக்கு முடியாகப் பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும் எனப்பரவும் பற்று விடாது துயில்வோர்க்குக் கனவிற் பாத மலரளிக்க உற்ற வருளால் அவைதாங்கி யுலக மெல்லாந் தனிப் புரந்தார்.
| [6] |
அம்பொன் நீடும் அம்பலத்துள் ஆரா வமுதத் திருநடஞ்செய் தம்பி ரானார் புவியின்மகிழ் கோயி லெல்லாந் தனித்தனியே இம்பர் ஞாலங் களிகூர எய்தும் பெரும்பூ சனை யியற்றி உம்பர் மகிழ அரசளித்தே யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.
| [7] |
காதற் பெருமைத் தொண்டின்நிலைக் கடல்சூழ் வையங் காத்தளித்துக் கோதங் ககல முயல்களந்தைக் கூற்ற னார்தங் கழல்வணங்கி நாத மறைதந் தளித்தாரை நடைநூற் பாவில் நவின்றேத்தும் போத மருவிப் பொய்யடிமை யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.
| [8] |
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தருந்திருநாட் கூனும் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும் பரவித் தீர்க்கின்றே னேழு பிறப்பின் முடங்குகூன்.
| [9] |