சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.340   சாக்கிய நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.340 சாக்கிய நாயனார் புராணம்   ( )
அறுசமயத் தலைவராய்
நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம்
வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங்
கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம்
அறிந்தபடி வழுத்துவாம்.
[1]
தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்
மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும்
அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும்
நிலைஒழிவேன் எனநிற்பார்.
[2]
அந்நாளில் எயிற்காஞ்சி
அணிநகரம் சென்றடைந்து
நல்ஞானம் அடைவதற்குப்
பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தாம்
மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந்
தத்துவத்தின் வழிஉணர்வார்.
[3]
அந்நிலைமைச் சாக்கியர்தம்
அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச்
சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச
ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ
தெனவுணர்வு நாட்டுவார்.
[4]
செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.
[5]
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலைநிற்பார்.
[6]
காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால்
நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்.
[7]
நாடோறும் சிவலிங்கங்
கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும்
சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை
நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப்
பதைப்போடும் எடுத்தெறிந்தார்.
[8]
அகநிறைந்த பேருவகை
அடங்காத ஆதரவால்
மகவுமகிழ்ந் துவப்பார்கள்
வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும்
இளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு
நீள்சடையார் தாம்மகிழ்வார்.
[9]
அன்றுபோய்ப் பிற்றைநாள்
அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங்
கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ
திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக
வென்றுமது செயநினைந்தார்.
[10]
தொடங்கியநா ளருளியவத்
தொழிலொழியா வழிதொடரும்
கடன்புரிவா ரதுகண்டு
கல்லெறிவார் துவராடைப்
படம்புனைவே டந்தவிரார்
பசுபதியார் தஞ்செயலே
அடங்கவுமென் பதுதெளிந்தா
ராதலினால் மாதவர்தாம்.
[11]
இந்நியதி பரிவோடு
வழுவாம லிவர்செய்ய
முன்னுதிருத் தொண்டாகி
முடிந்தபடி தான்மொழியில்
துன்னியமெய் யன்புடனே
யெழுந்தவினை தூயவர்க்கு
மன்னுமிகு பூசனையாம்
அன்புநெறி வழக்கினால்.
[12]
கல்லாலே யெறிந்ததுவு
மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும்
திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை
யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா
ரரனார்க்கஃ தலராமால்.
[13]
அங்கொருநாள் அருளாலே
அயர்ந்துண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் றனையெறியா
தயர்த்தேன்யா னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன்
மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார்
திருமுன்பு மேவினார்.
[14]
கொண்டதொரு கல்லெடுத்துக்
குறிகூடும் வகையெறிய
உண்டிவினை யொழித்தஞ்சி
யோடிவரும் வேட்கையொடும்
கண்டருளுங் கண்ணுதலார்
கருணைபொழி திருநோக்கால்
தொண்டரெதிர் நெடுவிசும்பில்
துணைவியொடுந் தோன்றுவார்.
[15]
மழவிடைமே லெழுந்தருளி
வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர்
கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி
மிக்கசிவ லோகத்தில்
பழவடிமைப் பாங்கருளிப்
பரமரெழுந் தருளினார்.
[16]
ஆதியார் தம்மை நாளுங்
கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட
குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித்
துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன்
சிறப்புலி யாரைச் செப்பி.
[17]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.350   சிறப்புலி நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
[1]
தூமலர்ச் சோலை தோறும்
சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ
மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட
புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை
ஆகுதித் தூப மோங்கும்.
[2]
ஆலை சூழ் பூகவேலி
அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார்
நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள்
நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினிற் சிறந்த நீரார்.
[3]
ஆளும்அங் கணருக் கன்பர்
அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.
[4]
அஞ்செழுத் தோதி அங்கி
வேட்டுநல் வேள்வியெல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும்
இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர்
தாள்நிழல் தங்கி னாரே.
[5]
அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன்.
[6]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.360   சிறுத்தொண்ட நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.
[1]
நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.
[2]
ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.
[3]
உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
[4]
ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
[5]
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
[6]
கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.
[7]
தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.
[8]
இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
[9]
உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது

மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.
[10]
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
[11]
வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.
[12]
நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.
[13]
தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
[14]
சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
[15]
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
[16]
நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.
[17]
அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.
[18]
மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.
[19]
ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
[20]
சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.
[21]
வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
[22]
அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.
[23]
சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.
[24]
இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.
[25]
மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.
[26]
அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.
[27]
அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.
[28]
வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.
[29]
களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.
[30]
செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.
[31]
மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.
[32]
பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.
[33]
அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.
[34]
அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.
[35]
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.
[36]
வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.
[37]
மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.
[38]
அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.
[39]
இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.
[40]
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
[41]
நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.
[42]
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
[43]
என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
[44]
பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.
[45]
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
[46]
எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.
[47]
அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
[48]
சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.
[49]
பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.
[50]
யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
[51]
அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.
[52]
அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.
[53]
வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.
[54]
அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.
[55]
மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.
[56]
என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.
[57]
காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.
[58]
பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.
[59]
குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
[60]
அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.
[61]
ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.
[62]
இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.
[63]
பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.
[64]
அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.
[65]
மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.
[66]
உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.
[67]
அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.
[68]
இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.
[69]
வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
[70]
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
[71]
பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.
[72]
பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.
[73]
சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.
[74]
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
[75]
வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.
[76]
அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.
[77]
உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.
[78]
ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.
[79]
நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
[80]
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.
[81]
பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
[82]
வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.
[83]
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
[84]
தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.
[85]
அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.
[86]
கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.
[87]
ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.
[88]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.370   கழற்றி அறிவார் நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
[1]
காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.
[2]
மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.
[3]
வேத நெறியின் முறைபிறழா
மிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்
தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை
துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக்
குலவு பெயரும் உடைத்துலகில்.
[4]
முருகு விரியும் மலர்ச்சோலை
மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி
அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச்
சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார்.
[5]
திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
[6]
மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
[7]
உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப்
புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து
நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு
மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.
[8]
திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
[9]
நீரில் மலிந்த கடல்அகழி
நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
[10]
வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.
[11]
எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
[12]
இன்பம் பெருகுந் திருத்தொண்டுக்
கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை
அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை
இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால்.
[13]
மேவும் உரிமை அரசளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாருங் கழறினவும்
அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத
கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும்
எல்லாங் கைவந் துறப்பெற்றார்.
[14]
ஆன அருள்கொண் டஞ்சலிசெய்
திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக்
கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு
வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ்
வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.
[15]
உரிமை நாளில் ஓரைநலன்
எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன
வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி
கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி
தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
[16]
தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.
[17]
மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.
[18]
சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.
[19]
மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.
[20]
யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.
[21]
உலகு புரக்கும் குடைவளவர்
உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய்
நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர
அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர
மறைகள் வளர மண்ணளிப்பார்.
[22]
நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
[23]
வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம்
முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால்
அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.
[24]
நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.
[25]
இன்ன வண்ணம் இவரொழுக
எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால
வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும்
பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம்
நல்க வேண்டி அருள்புரிவார்.
[26]
இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.
[27]
அதிர்கழல் உதியர் வேந்தற்
கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகங் கொடுத்தார் காண.
[28]
சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.
[29]
கேட்ட பொழுதே கைதலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய
எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின்
புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகாற் பணிகின்றார்.
[30]
அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
[31]
பரிவில் போற்றித் திருமுகத்தைப்
பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி
யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு
மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து
பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.
[32]
நங்கள் குலமா ளிகையதனுள்
நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே
அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற்
சமைய வேற்றிக் கொணருமென.
[33]
சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.
[34]
பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.
[35]
பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
[36]
இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
[37]
பண்பு பெருகும் பெருமாளும்
பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர்
வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை
நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை
புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
[38]
வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
[39]
அளவில் பெருமை அகிலயோ
னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள்
ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான
கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர்
மகிழும் கலப்பில் வைகு நாள்.
[40]
வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.
[41]
பூசை கடிது முடித்தடியேன்
என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே
றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை
யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஒசை மிகவும் இசைப்பித்தார்.
[42]
ஆடல் சிலம்பின் ஒலிகேளா
வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக்
கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார்
நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன்
செய்யா தொழிந்த தென்னென்றார்.
[43]
என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி
யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.
[44]
என்னே அடியார்க் கிவரருளும்
கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய்
புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர்
தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார்
நாமச் சேரர் கோமானார்.
[45]
பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
[46]
இட்ட நன்னாள் ஓரையினில்
இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார்
தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப்
பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார்.
[47]
யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.
[48]
புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க
மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான்
மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை
நேமி நெளியச் சென்றனவால்.
[49]
அந்நாட் டெல்லை கடந்தணைய
அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில்
கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.
[50]
சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.
[51]
பொருவில் பொன்னித் திருநதியின்
கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச்
செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார்
ஒழியா அன்பின் வழிவந்தார்.
[52]
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
[53]
நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
[54]
அளவில் இன்பப் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று
உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு
தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார்.
[55]
ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.
[56]
தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.
[57]
ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம்
நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி
வணங்கிப் புறத்து வைகினார்.
[58]
பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.
[59]
ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
[60]
அறிவின் எல்லை யாயதிருத்
தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப்
பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து
அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
[61]
வழியில் குழியில் செழுவயலில்
மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந்
துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார்
விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக்
கழனி யாரூர் கண்ணுற்றார்.
[62]
நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
[63]
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
[64]
முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
[65]
ஆன நிலைமை கண்டதிருத்
தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான்
தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க் காகி விளங்கியதால்.
[66]
ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.
[67]
சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்

உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
[68]
தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.
[69]
அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
[70]
சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.
[71]
தாண்டு புரவிச் சேரர்குலப்
பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க்
கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.
[72]
அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.
[73]
சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.
[74]
ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.
[75]
ஒக்க அமுது செய்தருள
வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்
தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந்
தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத்
தூயவிருந்தின் கடன்முடித்தார்.
[76]
பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுது மேந்தினார்.
[77]
ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
[78]
மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.
[79]
செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.
[80]
இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
[81]
சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.
[82]
இருவர் திருவுள் ளமும்இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி
யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு
போது வார்கள் உடன்போத.
[83]
சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.
[84]
திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை
சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார்
இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா
டணைந்தார் சேர ராரூரர்.
[85]
முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி.
[86]
நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
[87]
எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்.
[88]
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.
[89]
அங்கு வைகிப் பணிந்தருளால்
போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப்
பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர்
இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட
மதுரை மூதூர் வந்தணைந்தார்.
[90]
சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
[91]
தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.
[92]
திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
[93]
படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.
[94]
செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.
[95]
உளம்மகிழக் கும்பிட்டங்
குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால்
அமர்ந்துகலந் தினிதிருந்தார்.
[96]
அந்நாளில் மதுரைநகர்
மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற்
புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித்
திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித்
தொழத்திருப்பூ வணத்தணைவார்.
[97]
நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.
[98]
சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
[99]
அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.
[100]
செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
[101]
பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.
[102]
கோத்திட்டை எனஎடுத்துக்
கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி
முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை
இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார்
தங்குதிருப் பரங்குன்றில்.
[103]
இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
[104]
அந்நாட்டுத் திருப்பதிகள்
பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன்
நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண்
வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன
செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
[105]
இருபெருவேந் தரும்இயல்பின்
மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர்
புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும்
பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும்
குற்றாலஞ் சென்றடைந்தார்.
[106]
குற்றாலத் தினிதமர்ந்த
கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து
குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத்
திருநெல்வே லியையணைந்தார்.
[107]
நெல்வேலி நீற்றழகர்
தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
திருவிரா மேச்சரத்து.
[108]
மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
[109]
திருஇரா மேச்சரத்துச்
செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று
பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர்
வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர்
மலைவேந்த ருடன்கூட.
[110]
திருச்சுழியல் இடங்கொண்ட
செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக்
[111]
அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.
[112]
கானப்பேர் யாம்இருப்ப
தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும்
மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந்
ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார்
அருளிருந்த பரிசென்பார்.
[113]
கண்டருளும் படிகழறிற் [114]
காளையார் தமைக்கண்டு
தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத்
தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண
வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன
முனைப்பாடி வளநாடர்.
[115]
மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
[116]
ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.
[117]
புனவாயிற் பதியமர்ந்த
புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த
நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி
வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார்
திருப்பாதந் தொழுதிருந்தார்.
[118]
திருப்புனவா யிற்பதியில்
அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல
பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று
புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம்
பாம்பணிமா நகர்தன்னில்.
[119]
பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.
[120]
திருநாவ லூர்வேந்தர் [121]
வாசமலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி
நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம்
எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார்
பயில்கோயில் பணிந்தணைவார்.
[122]
பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
[123]
பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
[124]
மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.
[125]
நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.
[126]
விரவு காதல் மீக்கூர
மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார்
தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார்
தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க
இசைந்தார் அவரும் எழுந்தருள.
[127]
நங்கை பரவை யார்உள்ளத்
திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப்
பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்
கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில்.
[128]
தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.
[129]
பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.
[130]
வடகரையில் திருவையா
றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக
வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங்
காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத்
தொழுவதற்கு நினைவுற்றார்.
[131]
ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
[132]
ஆறு பெருகி இருகரையும்
பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள்
மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி
நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியா தழைத்துப் பாடுவார்.
[133]
பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.
[134]
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
[135]
விண்ணின் முட்டும் பெருக்காறு
மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர்
வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக்
கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங்
கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.
[136]
நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.
[137]
செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.
[138]
அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
[139]
ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.
[140]
கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.
[141]
பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.
[142]
திசைகள் தோறும் வரும்பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.
[143]
கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.
[144]
நகர மாந்தர் எதிர்கொள்ள
நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
[145]
இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
[146]
தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
[147]
நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
[148]
பூவும் பொரியும் பொற்றுகளும்
பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே
புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி
வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.
[149]
கழறிற் றறியுந் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று.
[150]
செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.
[151]
பெருமாள் வேண்ட எதிர்மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த
ருடனே அமுது செய்துவந்தார்.
[152]
சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.
[153]
பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
[154]
செண்டாடும் தொழின்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி
மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத்
தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக்
காவலனார் காதல்செய்நாள்.
[155]
நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.
[156]
திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.
[157]
வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.
[158]
ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
[159]
மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
[160]
மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.
[161]
ஆங்கவரும் அன்றுவரை
ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள்
ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு
வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல்
தலம்மலியக் கொண்டணைந்தார்.
[162]
மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.
[163]
ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.
[164]
திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.
[165]
வென்றிமிகு பூதங்கள்
வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங்
கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார்
அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில்
இருபாலும் செயிர்த்தெழுந்து.
[166]
வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.
[167]
ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.
[168]
அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.
[169]
உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.
[170]
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
[171]
கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
[172]
நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.
[173]
இந்நிலைமை யுதியர்பிரான்
எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று
மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின்
மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந்
திருத்தொழில்பின் மொழிகின்றாம்.
[174]
மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.
[175]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.380   கணநாத நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆழி மாநிலத் தகிலம்ஈன்
றளித்தவள் திருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந்
தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து
மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை
யவர் குலக் காவலர் கணநாதர்.
[1]
ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநல் திருப்பணி
யாயின நாளும்அன் பொடுசெய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
[2]
நல்ல நந்தன வனப்பணி
செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ம லர்த்தொடை புனைபவர்
கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பக லும் திரு
வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.
[3]
இனைய பல்திருப் பணிகளில்
அணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின்
வினைவி ளங்கிட வேண்டிய
குறையெலாம் முடித்துமே விடச்செய்தே
அனைய அத்திறம் புரிதலில்
தொண்டரை யாக்கிஅன் புறுவாய்மை
மனைய றம்புரிந் தடியவர்க்
கின்புற வழிபடுந் தொழில்மிக்கார்.
[4]
இப்பெ ருஞ்சிறப் பெய்திய
தொண்டர்தாம் ஏறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ
னகர்கழல் மேவிய விருப்பாலே
முப்பெ ரும்பொழு தருச்சனை
வழிபாடு மூளும்அன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூர் உளங்களி
சிறந்திட வொழுகினார் வழுவாமல்.
[5]
ஆன தொண்டினில் அமர்ந்தபேர்
அன்பரும் அகலிடத் தினில்என்றும்
ஞான முண்டவர் புண்டரீ
கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர்
சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு
நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.
[6]
உலகம் உய்யநஞ் சுண்டவர்
தொண்டினில் உறுதிமெய் யுணர்வெய்தி
அலகில் தொண்டருக் கறிவளித்
தவர்திற மவனியின் மிசையாக்கும்
மலர்பெ ரும்புகழ்ப் புகலியில்
வருங்கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்றுவண் கூற்றுவ
னார்திறங் கொள்கையின் மொழிகின்றாம்.
[7]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
12.390   கூற்றுவ நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
துன்னார் முனைகள் தோள்வலியால்
வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில்
நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம்
பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில்
முயன்றார் களந்தை முதல்வனார்.
[1]
அருளின் வலியால் அரசொதுங்க
அவனி யெல்லாம் அடிப்படுப்பார்
பொருளின் முடிவுங் காண்பரிய
வகையால் பொலிவித் திகல்சிறக்க
மருளுங் களிறு பாய்புரவி
மணித்தேர் படைஞர் முதல்மாற்றார்
வெருளுங் கருவி நான்குநிறை
வீரச் செருக்கின் மேலானார்.
[2]
வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.
[3]
மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.
[4]
ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.
[5]
அற்றை நாளில் இரவின்கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம்
பெறவே வேண்டும் எனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக்
கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளால் அவைதாங்கி யுலக
மெல்லாந் தனிப் புரந்தார்.
[6]
அம்பொன் நீடும் அம்பலத்துள்
ஆரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ்
கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர எய்தும்
பெரும்பூ சனை யியற்றி
உம்பர் மகிழ அரசளித்தே
யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.
[7]
காதற் பெருமைத் தொண்டின்நிலைக்
கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக்
கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை
நடைநூற் பாவில் நவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை
யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.
[8]
தேனும் குழலும் பிழைத்த திரு
மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும்
சடையார் தூது தருந்திருநாட்
கூனும் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றே
னேழு பிறப்பின் முடங்குகூன்.
[9]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool